தஞ்சை மாதாக்கோட்டை வாடிவாசலில் சீறிய 700 காளைகள்…!
தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டை வாடிவாசலில் 700 காளைகள் சீறிப்பாய, வீரத்துடன் களம் கண்ட மாடுபிடி வீரர்களுக்குப் பரிசு மழை பொழிந்ததில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக அமைந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கியது. மாவட்டத்தின் இந்த சீசன் தொடக்கப் போட்டி என்பதால், தஞ்சை மட்டுமின்றி திருச்சி, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 700 காளைகள் வாடிவாசலில் அணிவகுத்தன. கோட்டாட்சியர் நித்யா மற்றும் தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைக்க, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு களத்தில் குதித்தனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளும், அவற்றைக் கட்டுப்படுத்த முயன்ற 320 வீரர்களும் சரிநிகர் சமானமாக மோதிக்கொண்டது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. வீரர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, அவர்கள் கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாத வகையில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்குத் தரையில் தேங்காய் நார்கள் பரப்பப்பட்டிருந்தன.
சுகாதாரத் துறை மற்றும் கால்நடைத் துறையினரின் முறையான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகே வீரர்களும் காளைகளும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்தக் களத்தில் சிறப்பாகச் செயல்பட்டு காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், டைனிங் டேபிள், மின்விசிறி மற்றும் வெள்ளி அண்டாக்கள் எனப் பரிசுகள் மழையாகக் குவிந்தன. மாவட்ட எஸ்.பி. ராஜாராம் உத்தரவின் பேரில், 400-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து இந்த வீர விளையாட்டைக் கண்டு ரசித்தனர்.
