ஒரே டிக்கெட்டில் சென்னையைச் சுற்றிப் பார்ப்பது எப்படி என்று தெரியுமா?
வெறும் 50 ரூபாயில் சென்னையின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களை ஒரு நாள் முழுவதும் சுற்றிப் பார்க்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது.
சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் பாரம்பரிய நினைவுச் சின்னங்களைச் சுற்றுலாப் பயணிகள் எளிதாகக் கண்டு ரசிப்பதற்காக, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ‘சென்னை உலா’ என்ற புதிய சுற்றுலாப் பேருந்து சேவையைத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாக, 1980-களில் சென்னையில் இயக்கப்பட்ட பேருந்துகளைப் போன்றே பழைய தோற்றத்தில் 5 பேருந்துகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தொடங்கி, எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம், செம்மொழிப் பூங்கா, சாந்தோம் தேவாலயம், கலங்கரை விளக்கம், விவேகானந்தர் இல்லம் மற்றும் மெரினா கடற்கரை போன்ற முக்கிய இடங்கள் வழியாகச் சென்று, மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்தையே வந்தடையும்.
இந்தச் சேவைக்கான இயக்க நேரங்களைப் பொறுத்தவரை, வார இறுதி மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இந்தச் சேவை கிடைக்கும். சென்ட்ரலில் இருந்து காலை 10 மணிக்கு முதல் பேருந்தும், இரவு 8:30 மணிக்கு கடைசிப் பேருந்தும் புறப்படும்.
இதற்கான கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ. 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு பயணச்சீட்டைப் பயன்படுத்தி, அன்றைய நாள் முழுவதும் இந்த வழித்தடத்தில் இயங்கும் 5 பேருந்துகளிலும் பயணிகள் எந்த நிறுத்தத்தில் வேண்டுமானாலும் இறங்கி, மீண்டும் ஏறி எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
