சென்னை மெட்ரோவில் அதிரடி மாற்றம்: இனி 3 நிமிடங்களுக்கு ஒரு ரயில்! ரயில்களின் எண்ணிக்கை 752 ஆக உயர்வு!
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்குப் பெரும் தீர்வாக விளங்கும் மெட்ரோ ரயில் சேவையில், பயணிகளின் வசதிக்காகச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) மிக முக்கியமான மாற்றத்தைச் செய்துள்ளது. ரயில்களுக்காகக் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் வகையில், ரயில்கள் வரும் கால இடைவெளி அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய ‘3-3-3’ முறை அறிமுகம்: இதுவரை வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்தில், மெட்ரோ ரயில்கள் 3 நிமிடம், அடுத்து 3 நிமிடம், பின்னர் 6 நிமிடம் என்ற இடைவெளியில் (3–3–6 முறை) இயக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு, தொடர்ந்து ஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் ஒரு ரயில் வரும் வகையில் ‘3–3–3’ முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பீக் ஹவர்ஸில் (Peak Hours) பயணிகள் நீண்ட நேரம் பிளாட்பாரங்களில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
கூடுதல் ரயில்கள் – 752 ஆக உயர்வு: இந்த புதிய கால அட்டவணையைச் செயல்படுத்துவதற்காக, தினசரி இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மற்ற வழித்தடங்களின் விவரம்: கொரிடார்–2-ல் (சென்னை சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் விமான நிலையம் வரை) தற்போது 12 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளின் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்துத் தரவுகளை ஆய்வு செய்த பிறகே, இந்த அதிரடி மாற்றத்தைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
தற்போது 54 கிலோமீட்டர் தூரத்திற்குச் சிறப்பாக இயங்கி வரும் சென்னை மெட்ரோவின் இந்த நடவடிக்கை, காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம் செல்வோருக்குப் பெரும் உதவியாக இருக்கும். ரயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் கூட்ட நெரிசலும் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
