சென்னையில் மிரட்டும் காற்று மாசு: 200-ஐ தாண்டிய AQI…மூச்சுத்திணறல் அபாயம்!
சென்னையில் கடந்த மூன்று நாட்களாக காற்றின் தரம் பெருமளவு குறைந்து, ‘மோசமான’ நிலையை எட்டியுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கோடம்பாக்கம், அரும்பாக்கம் மற்றும் பெருங்குடி போன்ற நகரின் உட்புறப் பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு (AQI) 200-ஐத் தாண்டியுள்ளது. நள்ளிரவு முதல் அதிகாலை 7 மணி வரை நிலவும் இந்த மோசமான சூழல், நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா மற்றும் இதய நோய்
உள்ளவர்களுக்கு கடும் மூச்சுத்திணறலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். திங்கட்கிழமை நிலவரப்படி, கோடம்பாக்கத்தில் அதிகபட்சமாக 239 AQI வரை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தத் திடீர் காற்று மாசுக்கு மெதுவான காற்றின் வேகம், அதிக ஈரப்பதம் மற்றும் நிலவும் மூடுபனி ஆகியவையே முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. இது குறித்து ஸ்கைமெட் வெதர் அமைப்பின் தலைமை வானிலை நிபுணர் மகேஷ் கூறுகையில், “உள்ளூர் காரணங்களால் ஏற்படும் மாசுக்கள், காற்று வேகமாக வீசாத காரணத்தால் வளிமண்டலத்திலேயே தங்கிவிடுகின்றன. சூரியன் உதித்த பிறகும் கூட இவை மறையாமல் இருப்பது கவலைக்குரியது” எனத் தெரிவித்துள்ளார். வாகனப் புகை மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளால் வெளியாகும் ‘PM2.5’ நுண்துகள்கள் நுரையீரலுக்குள் எளிதாகச் சென்று பாதிப்பை ஏற்படுத்துவதால், மக்கள் அதிகாலை நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) கணிப்புப்படி, அடுத்த சில நாட்களுக்கு அதிகாலை நேரங்களில் மூடுபனி நீடிக்கும் என்பதால் காற்றின் தரம் ‘மோசமான’ அல்லது ‘மிதமான’ நிலையிலேயே இருக்கும். இருப்பினும், வரும் டிசம்பர் 27-ம் தேதி வாக்கில் சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை பதிவர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மழை பெய்யும் பட்சத்தில் காற்றில் உள்ள மாசுக்கள் நீங்கி காற்றின் தரம் மேம்படக்கூடும். அதுவரை, காலை நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் முதியவர்கள் அதிகாலை நேரங்களில் வீட்டிற்குள்ளேயே இருப்பது பாதுகாப்பானது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
