ராமநாதபுரம் பாசனத்திற்காக வைகை அணை திறப்பு: மதுரையில் இரு கரைகளையும் தொட்டுப் பாயும் தண்ணீர்!

New Project (3)

மதுரை | டிசம்பர் 17, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் மற்றும் விவசாயப் பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் இன்று மதுரை நகரை வந்தடைந்த நிலையில், வைகை ஆறு இரு கரைகளையும் தொட்டு ஆர்ப்பரித்துச் செல்கிறது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் கோரிக்கை மற்றும் விவசாயிகளின் நலன் கருதி, தமிழக அரசு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதன்படி, அணையில் இருந்து விநாடிக்கு 2,250 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்தத் தண்ணீர் பார்த்திபனூர் மதகு அணை வழியாக ராமநாதபுரம் மாவட்டத்தின் கண்மாய்களைச் சென்றடையும்.

அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரானது இன்று அதிகாலை மதுரை மாநகரை வந்தடைந்தது. வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், நகரின் மையப்பகுதியில் ஆறு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வைகை ஆறு இரு கரைகளையும் தொட்டுப் பாய்வதைக் கண்டு மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தத் தண்ணீர் திறப்பு மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, குடிநீர் தட்டுப்பாடும் நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *