தவெக கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை உயர் நீதிமன்றத்தில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் கொடி நிறம் தொடர்பாக புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அறக்கட்டளை, தமிழக அரசின் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு, சிவப்பு-மஞ்சள்-சிவப்பு நிறங்களைக் கொண்ட கொடியை தங்களது பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரையாக பயன்படுத்தி வருகிறது.இந்நிலையில், தவெக கட்சித் தலைவர் விஜய் 2024 ஆகஸ்டில் தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். இந்தக் கொடியில் சிவப்பு-மஞ்சள்-சிவப்பு நிறங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனர் தலைவர் பச்சையப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், தங்கள் அமைப்பு மட்டுமே இந்த நிறங்களைக் கொண்ட கொடியை பயன்படுத்த உரிமை உள்ளதாகவும், தவெகவின் கொடி தங்கள் வர்த்தக முத்திரையைப் பிரதிபலிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தவெக மற்றும் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கு ஜூலை 29, 2025 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
