மாநிலங்களவை தேர்தல் | வேட்புமனு தாக்கல் செய்தார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மாநிலங்களவை தேர்தலுக்காக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், திமுக வேட்பாளர்களான வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தனது வேட்புமனுவை சமர்ப்பித்தார்.
தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களான ம.தி.மு.க.வைச் சேர்ந்த வைகோ, திமுகவைச் சேர்ந்த வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க.வின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்காக ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பாக 4 இடங்களில் 3 பேர் திமுகவைச் சேர்ந்தவர்களாகவும், ஒரு இடம் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்பட்டு, அதில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் ஜூன் 2 முதல் தொடங்கியது.
வேட்புமனு தாக்கலின்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவர்களான செல்வப்பெருந்தகை, திருமாவளவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மறுபுறம், அ.தி.மு.க. சார்பாக வேட்பாளர்களான இன்பதுரை (வழக்கறிஞர் பிரிவு செயலாளர்) மற்றும் தனபால் (செங்கல்பட்டு மாவட்ட அவைத் தலைவர்) ஆகியோர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அப்போது முன்னாள் அமைச்சர்களான கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோரும் உடனிருந்தனர்.