இரட்டை இலை சின்னம் விவகாரம்; தேர்தல் ஆணையத்திற்கு எதிராக புகழேந்தி டெல்லி ஐகோர்ட்டில் மனு!

இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில், கடந்த 9 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த புகழேந்தி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவதற்கு தடை கோரி முன்னதாக அளிக்கப்பட்ட மனு மீது தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகழேந்தி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்து, 6 இடங்கள் காலியாக உள்ள நிலையில், இந்தத் தேர்தலுக்கு தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புகழேந்தியின் மனுவில், தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை செயல்படுத்தத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால், நீதிமன்ற உத்தரவை மதிக்காததற்காக தேர்தல் ஆணையம் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.