ரூ.7,500 கோடி: தமிழக பிரியாணி சந்தையில் கோலோச்சும் தள்ளுவண்டி கடைகள்!

மிழ்நாட்டில் காதுகுத்து முதல் கல்யாணம் வரை மட்டுமல்ல, அன்றாட உணவு பட்டியலிலும் பிரியாணிக்கு தனி இடம் உண்டு . அந்த அளவுக்கு தமிழக உணவு கலாச்சாரத்தில் ஆழமான இடத்தைப் பிடித்துள்ள பிரியாணி, தற்போது தமிழக உணவு சந்தையில் 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பெரிய தொழிற்துறையாக உருவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் ஓட்டல்கள், உணவு விடுதிகள், சங்கிலித் தொடர் ரெஸ்ட்ராண்ட்கள் போன்றவற்றின் மூலம் விற்கப்படும் அமைப்பு சார்ந்த பிரியாணி சந்தையின் மதிப்பு 2,500 கோடி ரூபாயாகவும், சாலை ஓர, தெரு ஓர தள்ளுவண்டி கடைகள் போன்ற அமைப்பு சாரா முறையில் விற்கப்படும் பிரியாணி சந்தையின் மதிப்பு 7,500 கோடி ரூபாயாகவும் உள்ளது என்றும் தமிழ்நாட்டின் உணவு வணிக சந்தை மதிப்பீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இதில், பிரியாணியின் மிகப்பெரிய சந்தையாக சென்னை மாநகரம் உள்ளது. 50% வணிகம் இந்த பிராந்தியத்திலிருந்து மட்டுமே நடக்கிறது.

விதவிதமான சுவைகளில்…

தமிழ்நாட்டின் பிரியாணி நிலப்பரப்பு பரந்த அளவில் மாறுபட்டது. இதனால், ஒவ்வொரு ஊரின் முறையில் தயாரிக்கப்படும் பிராந்திய பாணி பிரியாணி, உணவு ஆர்வலர்களை கவர்ந்திழுக்கிறது. திண்டுக்கல் மற்றும் அம்பூருடன் கோயம்புத்தூரை உள்ளடக்கிய கொங்கு பிராந்தியம் அவற்றின் தனித்துவமான பிரியாணி சுவைகளுக்காக கொண்டாடப்படுகிறது. பாஸ்மதி அரிசியால் தயாரிக்கப்படும் நறுமண சென்னை முஸ்லிம் பிரியாணி முதல் சீரகா சம்பா அரிசியால் தயாரிக்கப்படும் சுவையான கொங்கு பிரியாணி வரை, ஒவ்வொரு பாணியும் ஒரு தனித்துவமான சுவையை அதனை உண்பவர்களுக்கு வழங்குகிறது. குறிப்பாக செட்டிநாடு, வாலாஜா மற்றும் ஆம்பூர் வகை பிரியாணி சுவைகள், பிரியாணி பிரியர்களைக் கொண்டாட வைக்கிறது. இதனாலேயே இது தமிழ்நாடு பிரியாணி பிரியர்களின் சொர்க்கமாக திகழ்கிறது

பிரியாணி சந்தையில் கோலோச்சும் பெரு நிறுவனங்கள்

திண்டுக்கல் தலப்பாக்கட்டி, ஜூனியர் குப்பண்ணா, புஹாரி மற்றும் அஞ்சப்பர் போன்ற அசைவ உணவு விடுதிகள் தமிழக பிரியாணி சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. தமிழ்நாடு முழுவதும் 65 விற்பனை கிளைகளைக் கொண்ட திண்டுக்கல் தலப்பாக்கட்டியில், தினமும் சுமார் 5,000 முதல் 6,000 கிலோ பிரியாணி விற்கப்படுகிறது. அதே நேரத்தில் ஜூனியர் குப்பண்ணாவில் ஆண்டுக்கு 1.2 மில்லியன் கிலோவுக்கும் அதிகமான பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது.

மவுண்ட் ரோடு பிலால் ஓட்டலில் தரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கூறுகிறார் அதன் நிர்வாகி ஒருவர். ஒரு நாளைக்கு 300 முதல் 400 கிலோ வரை பிரியாணி பரிமாறப்படும் நிலையில், இவற்றை மொத்தமாக சமைக்காமல், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை புதிதாக சமைக்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார். இத்தகைய நிலையில், இது போன்ற ஓட்டல்களில் விற்கப்படும் பிரியாணி வகைகள் ஒரு பிளேட் ரூ. 500, 600 முதல் 1,600 ரூபாய்க்கு அதிகமாகவும் விற்கப்படுகிறது.

தள்ளுவண்டி கடைகளிலும் தரமான பிரியாணி

மறுபுறம், சிறிய சாலையோர கடைகள் மற்றும் தள்ளுவண்டி விற்பனையாளர்கள் மலிவு விலையில் 100 ரூபாய் முதல் பிரியாணியை வழங்குகின்றனர் என்பதால், பிரியாணி அதை உண்ண நினைப்பவர்களுக்கு எளிதில் கிடைக்கிறது ( இதில் பல கடைகளில் சுவை அபாரமாக இருப்பதால், கார்களில் வந்து சாப்பிடுபவர்களும் உள்ளனர்).

80,90 கள் வரை பிரியாணி சாப்பிட வேண்டும் என்றால் இப்போது இருப்பது போன்று சாலை ஓர, தள்ளு வண்டிகளில் எல்லாம் கிடைக்காது. குறிப்பிட்ட நல்ல ஓட்டல்களுக்கு தான் தேடிச் செல்ல வேண்டும். அப்படிச் சென்று சாப்பிடுவது என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கே மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என்ற அளவில் தான் சாப்பிட முடியும். அந்த அளவுக்கு தான் பட்ஜெட் இடம் கொடுக்கும். அப்படியான நிலையில், ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி என்பது அத்தனை எளிதில் கிட்டாத, கனவு சாப்பாடு தான்.

மசாலா பொடி நிறுவனங்களுக்கும் மார்க்கெட்

பிரியாணியின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் மசாலா பொடி தயாரிக்கும் முன்னணி பிராண்டுகள் மக்களின் நவீன விருப்பங்களைப் பூர்த்தி செய்ய, தங்களது தயாரிப்புகளில் பல்வேறு புதுமைகளை உருவாக்கி வருகின்றன. இந்த இலாபகரமான சந்தையின் ஒரு பகுதியை கைப்பற்ற மசாலா பிராண்டுகள் சிறப்பு பிரியாணி மசாலா கலவைகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன.

பிரியாணி என்பது தமிழ்நாட்டில் ஒரு உணவு மட்டுமல்ல, பாரம்பரியத்தையும் நவீனத்துவத்தையும் இணைக்கும் ஒரு அனுபவமாகும். தள்ளுவண்டி முதல் பிரீமியம் ஹோட்டல்கள் வரை, இந்த உணவு அனைத்து பொருளாதார அடுக்குகளிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கிறது. அதன் வளமான மரபு மற்றும் அதன் மீதான மக்களின் தொடர் ஈர்ப்பு போன்றவற்றால், பிரியாணி தமிழக சமையலில் மட்டுமல்லாது, தமிழக உணவு சந்தையின் ராஜாவாகவும் தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Integrative counselling with john graham. But rаthеr thаn wоrkіng соnѕіѕtеntlу for a return tо thе status ԛuо it is, in fасt, rаіѕіng thе stakes. Ist eine ordentliche kündigung ohne grund rechtlich möglich ?.