1.47 லட்சம் கிலோ போலி ORS பறிமுதல்!

New Project - 2025-11-07T134813.602

தமிழக சந்தைகளில் “ஓஆர்எஸ்” என்கிற பெயரில் விற்கப்பட்ட 1.47 லட்சம் கிலோ போலி திரவ பானங்களை தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய அமைப்பின் (FSSAI) உத்தரவின்படி உணவு பாதுகாப்பு துறை பறிமுதல் செய்துள்ளது.

வயிற்றுப்போக்கு காரணமாக உடலில் ஏற்படும் நீரிழப்பை சரி செய்ய உலக சுகாதார நிறுவனம் (WHO) அங்கீகரித்த உப்பு–சர்க்கரை கலவை (ORS) மிக முக்கியமானது. இதன் 20.5 கிராம் பொட்டலத்தில் தேவையான சோடியம், குளுக்கோஸ், பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புகள் சரியான அளவில் இருக்க வேண்டும். கொதிக்க வைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் அதை கலந்து 24 மணி நேரத்திற்குள் குடிப்பதே சரியான முறை.

ஆனால், சந்தையில் “ORS liquid”, “Hydration drink” போன்ற பெயர்களில் விற்பனை செய்யப்பட்ட திரவ பானங்களில் WHO நிர்ணயித்த அளவுகள் இல்லை. இவை உடலுக்கு சற்றே ஆற்றல் தரலாம், ஆனால் வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீரிழப்பை சரி செய்ய முடியாது எனவும், சில சமயம் நிலையை மேலும் மோசமாக்கும் அபாயம் உள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த போலி திரவங்கள் குறித்து ஏற்கனவே மாநில பொது சுகாதாரத்துறை எச்சரித்த நிலையில், தற்போது மத்திய அரசு நேரடியாக தலையிட்டு விற்பனைக்கு முழு தடை விதித்துள்ளது. அதன் பின்னர், தமிழகத்தில் உள்ள மூன்று உற்பத்தி ஆலைகளிலும், பல மருந்தகங்களிலும், சந்தைகளிலும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு 1.47 லட்சம் கிலோ பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

“உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த தரமான ORS பொட்டலங்களே அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக வழங்கப்படுகின்றன. தனியார் மருந்தகங்களிலும் தரச்சான்று பெற்ற ORS எளிதில் கிடைக்கிறது. எனவே, மக்கள் தரமான ORS-ஐ மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மாநிலம் முழுவதும் மருந்தகங்களில் கடுமையான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. தடை செய்யப்பட்ட தயாரிப்புகளை ரகசியமாக விற்பனை செய்ய முயன்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

联系我们. ip cam 解決方案. Game changers : how recent tech updates are transforming industries » tech news today.