தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று காலை வரை பதிவான 24 மணி நேர மழைப்பதிவில் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் வளத்தி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் மியான்மர் கடலோரப் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது அதே இடத்தில் நீடித்து வருகிறது. இந்த அமைப்பு இன்று வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை துறை தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இன்று மற்றும் நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 11ம் தேதி வரை லேசான மழை பல இடங்களில் தொடரும். சில மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பச்சலனத்தால் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியிருந்தாலும் மேற்குத் திசை காற்றின் தாக்கம் இன்னும் குறையாததால் பருவமழை செயல்பாடு ஓரளவு மந்தமாக உள்ளது. கிழக்குத் திசை காற்று வலுவாக தொடங்காததும் இதற்குக் காரணமாகும்.
இந்த நிலை வரும் 12ஆம் தேதி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கிழக்குக் காற்று வலுப்பெறும்போது பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.தென்சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் அருகே உருவான ‘கல்மேகி’ புயல் தாய்லாந்து நோக்கி நகர்ந்து வருகிற நிலையில், இது தமிழகத்தின் வடகிழக்கு பருவமழைக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என வானிலை ஆய்வு கூறியுள்ளது.
