சென்னையில் மின்னல் வேகத்தில் மின்சாரம்… மின்வாரிய ஊழியர்களுக்கு குவியும் பாராட்டு!

WhatsApp Image 2023-12-11 at 17.30.48

மிக்ஜாம் புயல் காரணமாக உருக்குலைந்த சென்னையை தங்கள் உயிரை பணயம் வைத்து இரண்டே நாட்களில் மின்சாரம் கொடுத்து பிரமிக்க வைத்துள்ளனர் நமது மின்வாரிய ஊழியர்கள். அவர்களின் பணியை, பிரபல ஆங்கில நாளிதழ் வெகுவாக பாராட்டியுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த 3-ம் தேதி இரவிலிருந்து 5ம் தேதி வரை அதி கனமழை பெய்தது. அந்த கனமழையையும் பொருட்படுத்தாமல் மாநகராட்சி ஊழியர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என மொத்த அரசு இயந்திரமும் பம்பரமாய் சுழன்று வேலை செய்தது.

மேலும், வெள்ளம் அதிகமாகத் தேங்கிய இடங்களில் படகுகள் மூலம் தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களைப் பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்றனர். அதேபோல் பொதுமக்கள் நலன் கருதி நிறுத்தப்பட்டிருந்த மின் விநியோகம், அனைத்தும் சரி செய்யப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத்  தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கை காரணமாக உயிர்ச் சேதங்களும் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டது. 

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை பொதுமக்களும் ஊடகங்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். தொடர்ந்து தற்போது வரை அமைச்சர் பெருமக்கள் களத்தில் இறங்கி, மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்து வருகின்றனர். இந்த சூழலில் தற்போது புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்த நிலையில் உயிரை பணயம் வைத்து பணி செய்ததாக தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகளுக்கு ஆங்கில நாளிதழ் டெக்கான் கிரானிக்கல் (Deccan Chronicle) பாராட்டு தெரிவித்துள்ளது. அதாவது மிக்ஜாம் புயலையொட்டி மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும், நிவாரண பணிகளிலும் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பங்கு சிறப்பானது எனப் பாராட்டு தெரிவித்துள்ளது.

50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி, பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டதாக அந்த நாளிதழ் கூறியுள்ளது. புயலுக்கு பின்னர், எண்ணூர் மற்றும் கொசஸ்தலை ஆற்று பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த உயர்மின்னழுத்த கோபுரம் பழுதடைந்ததாகவும், இதனால் எண்ணூர், மணலி, மீஞ்சூர் மற்றும் சில இடங்களில் மீண்டும் மின்சாரம் வழங்க, மின்வாரிய அதிகாரிகளும் ஊழியர்களும், படகில் ஏறிச்சென்று, உயரமான கோபுரத்தின் மீது ஏறி, தங்களது உயிரைப் பணயம் வைத்து பழுது நீக்கி, மீண்டும் மின்சாரத்தை வரவழைத்ததாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

எண்ணூர், மீஞ்சூர் மற்றும் மணலியின் 25 கிலோமீட்டர் தூரத்திலுள்ள உயர்மின் வழித்தட கோபுரங்கள், மிச்சாங் புயல் பாதிப்பிலிருந்து உடனடியாக சரி செய்யப்பட, மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்த முன்னேற்பாடுகள்தான் மிக முக்கிய காரணம் எனவும் அது பாராட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

essential tools for website and social media. Just a moment.... power only wyoming.