“என் பேச்சைக் கேட்காதவர்கள் என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது!” – அன்புமணி குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு
பாமகவில் தந்தை-மகன் மோதல்: ராமதாஸ்-அன்புமணி இடையே வாக்குவாதம்
பாமகவில் உட்கட்சி பூசல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கும்பகோணத்தில் நடந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகனும் செயல் தலைவருமான அன்புமணிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
ராமதாஸ், அன்புமணியின் சமீபத்திய கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில், “அன்புமணி எனது பெயரைப் பயன்படுத்தக் கூடாது. தேவைப்பட்டால் இனிஷியலைப் போட்டுக்கொள்ளலாம். என் பேச்சைக் கேட்கவில்லை என்றால், என் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது,” என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும், “இனிஷியலைப் போட்டுக்கொள்ளலாம், ஆனால் என்னுடைய பெயரை முழுமையாகப் பயன்படுத்தக் கூடாது,” என்று அவர் வலியுறுத்தினார். இந்தக் கருத்து, அன்புமணியின் சமீபத்திய பேச்சுக்கு எதிரான நேரடி பதிலடியாகக் கருதப்படுகிறது.
ராமதாஸ், அன்புமணியின் “வயது முதிர்வால் குழந்தை போல் மாறிவிட்டார்” என்ற கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், “ஐந்து வயது குழந்தை போல் நான் செயல்படுவதாகச் சிலர் கூறி வருகின்றனர். அந்த ஐந்து வயது குழந்தையான நான்தான் மூன்று ஆண்டுகளுக்கு முன் அன்புமணியை தலைவராக்கியவன்,” என்று கூறி, தனது முடிவுகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டினார்.
மேலும், தொடர்ந்து அவர் பேசுகையில் “தசரதன் ஆணையை ஏற்று ராமர் வனவாசம் சென்றார். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை,” என்று கூறி, தனது வார்த்தைகளுக்கு அன்புமணி கட்டுப்பட வேண்டும் என்று மறைமுகமாக எச்சரித்தார். “செயல் தலைவர் என்று சொல்கிறோம், மக்களைச் சென்று பாருங்கள், மக்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்,” என்று கூறினார்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த தந்தை-மகன் மோதல் பாமக ஆதரவாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் கட்சியின் எதிர்கால உத்திகளை பாதிக்குமா என அரசியல் வட்டாரத்தில் விவாதம் எழுந்துள்ளது.
