அரையாண்டு விடுமுறையில் மாற்றமில்லை – கல்வித்துறை
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், விடுமுறை நாட்கள் குறித்துச் சமூக வலைதளங்களில் பரவிய வதந்திக்குப் பள்ளிக்கல்வித்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு, அரையாண்டுத் தேர்வுகள் முடிவடைந்த பிறகு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் டிசம்பர் 23-ம் தேதியுடன் நிறைவடைகின்றன. இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 4-ம் தேதி வரை சுமார் 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், “பாடத்திட்டங்களை முடிக்க வேண்டி இருப்பதால், முன்கூட்டியே பள்ளிகள் திறக்கப்பட உள்ளன” என்றும், “விடுமுறை நாட்கள் குறைக்கப்படலாம்” என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாகப் பரவின. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இந்தக் குழப்பத்தைப் போக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். அதில், “அரையாண்டு விடுமுறையைக் குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை. ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 24-ம் தேதி முதல் 12 நாட்கள் விடுமுறை விடப்படும்.
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளைப் பெற்றோர்களும் மாணவர்களும் நம்ப வேண்டாம்,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.எனவே, மாணவர்கள் எவ்வித குழப்பமும் இன்றித் தேர்வுகளுக்குத் தயாராகலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
