கொரோனா பரவல்… தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயமா?

Corona mask

கொரோனா பாதிப்பு, கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதி முதல், 2023 ஆம் ஆண்டு வரை உலகம் முழுவதும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்தாலும், தீவிர பாதிப்பாக இதுவரை மாறவில்லை. தற்போது, ஹாங்காங், சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படும் நிலையில், இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.

குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில், கடந்த 1 ஆம் தேதி தொடங்கி தற்போது வரை மொத்தம் 182 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அம்மாநில சுகாதாரத்துறை, தொற்று பரவுவதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோன்று மகாராஷ்டிராவில் 56 பேர்; கர்நாடகாவில் 13 பேர்; புதுச்சேரியில் 10 பேர் என கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உள்ளது என்றாலும், தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இல்லை. நேற்று வரை தமிழகத்தில் 66 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தற்போது, வீரியம் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு தான் உள்ளது. ‘ஒமைக்ரான்’ வகை வைரஸ் உட்பிரிவுகளான,ஜெ.என்., 1 மற்றும் எக்.இ.சி., ஆகிய தொற்றுகளே காணப்படுகின்றன. இதனால், இந்நோயின் தாக்கம் மற்றும் இறப்பின் விகிதம் குறைந்தே காணப்படுகிறது.

முகக்கவசம் கட்டாயமா?

ஆனாலும், பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்தல் அவசியம் என்பதே மருத்துவர்களின் பொதுவான அறிவுறுத்தலாக உள்ளது. காய்ச்சல், நுரையீரல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அருகில் உள்ள மருத்துவரை அணுகி, சிகிச்சை பெறுவது அவசியம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவது அவசியம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால், ” பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை. சுகாதாரத் துறை மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை எந்த செய்தியும் உண்மைத்தன்மை இல்லை. எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை” என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருக்கக்கூடிய நிலையில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. மேலும், வீரியம் இல்லாத கொரோனா என்பதால் நோய் பரவல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார துறையும் மத்திய அரசும் எச்சரிக்கையுடன் இருங்கள் என்று கூறியதே தவிர, மற்ற எந்த விவரங்களையும் கூறவில்லை. தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் கொடுக்கப்படும். ஆனால், அதற்கு முன்னதாகவே இது குறித்து சமூக வலைதளங்களில் பரவக்கூடிய செய்திகள் தவறானவை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ai blog : create content automatically and earn. Just a moment.... heavy equipment transport ventura ca.