டி20 உலகக் கோப்பை: கோலி இல்லாதது பெரிய பலவீனம் – இந்திய அணியை விமர்சித்த ஸ்ரீகாந்த்!
அரை இறுதிக்குச் செல்ல ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ள நிலையில், விராட் கோலி இல்லாதது அணியின் பலவீனத்தைக் காட்டுவதாக ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்!
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் 10-வது டி20 உலகக் கோப்பை தொடரில், இந்திய அணி சூப்பர்-8 சுற்றின் முதல் போட்டியிலேயே தென் ஆப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்வியால் அரை இறுதி வாய்ப்பைத் தக்கவைக்க, அடுத்து வரும் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் தற்போதைய பின்னடைவு குறித்து முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இந்திய அணியின் பிளேயிங் 11-ல் மாற்றங்கள் தேவை என்று வலியுறுத்திய ஸ்ரீகாந்த், சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டுமென்றால் திலக் வர்மாவை நீக்க வேண்டியிருக்கும் எனக் குறிப்பிட்டார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் திலக் வர்மா விளையாடிய விதம் மிக மோசமாக இருந்ததாகவும், பொறுப்பற்ற ஷாட் மூலம் ஆட்டமிழந்த அவர் அந்தப் போட்டியில் தொடர்ந்து விளையாடத் தகுதியற்றவராகவே தெரிந்ததாகவும் சாடினார். திலக் வர்மாவின் இந்தச் செயல்பாடு இந்திய அணியின் மத்திய வரிசையை பலவீனப்படுத்தியுள்ளதாக அவர் கருத்து தெரிவித்தார்.
மேலும், இந்திய அணியில் விராட் கோலி இல்லாதது மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளதாக ஸ்ரீகாந்த் கவலை தெரிவித்தார். கடினமான இலக்குகளைத் துரத்துவதில் (Run Chase) கில்லாடியான விராட் கோலி இல்லாததால், இந்தியா பெரிய ரன்களைத் துரத்த முடியாமல் தடுமாறுவது அப்பட்டமாகத் தெரிகிறது. விராட் கோலி போன்ற ஒரு முதுகெலும்பு இல்லாத வரை, எதிரணிகள் முதலில் பேட்டிங் செய்து இந்தியாவுக்குப் பெரிய இலக்கை நிர்ணயித்து நெருக்கடி கொடுக்கும் தந்திரத்தையே பின்பற்றும் என்றும் அவர் எச்சரித்தார்.
