அதிகரிக்கும் மோதல்… ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்பாரா?

MK Stalin - Governor Ravi 1200

வ்வொரு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று மாலையில் ஆளுநர் மாளிகையில், விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டும் ஆளுநர் மாளிகையில் வருகிற 26 ஆம் தேதி, குடியரசு தினத்தன்று மாலை ஆளுநர் தேநீர் விருந்து அளிக்க உள்ளார். இதனையொட்டி பல்வேறு கட்சிகள் மற்றும் பிரமுகர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். திமுக, அதிமுக, பா.ஜ., தேமுதிக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளுக்கும், முக்கிய அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆளுநர் கொடுக்கவிருக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ், விசிக, சிபிஎம் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. கடந்த ஆண்டும் இதேபோல் குடியரசு தினத்திற்கான ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்திருந்தன.

மேலும், கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்றும் ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, கொமதேக, மமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. ஆனால், அரசு சார்பில் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆளுநர் – அரசு தரப்பு மோதல் தீவிரம்

இந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதியன்று கூடிய இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடரின் முதல் நாளில், தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி, ஆளுநர் ஆர். என். ரவி தான் ஆற்ற வேண்டிய ஆளுநர் உரையை வாசிக்காமலேயே வெளியேறினார். இது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “அரசியலமைப்புச் சட்டத்தையும் தேசிய கீதத்தையும் அவமதிக்கும் இத்தகைய அப்பட்டமான நடவடிக்கைக்கு உடந்தையாக இருக்கக் கூடாது என்பதற்காக ஆளுநர் மிகுந்த வேதனையுடன் அவையை விட்டு வெளியேறினார்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், முதலில் தமிழ்த் தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதமும் பாடப்படுவது தான் மரபு என்றும், ஆனால் ஆளுநர் வேண்டுமென்றே ஒரு காரணத்தைக் கூறி வெளியேறியதாக அரசு தரப்பிலும், திமுக தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டது.

இப்படியான பின்னணியில், பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் நியமனம் தொடர்பாகவும் மோதல் இருந்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விரைவில் விசாரிக்க முன்னுரிமை அளித்து பட்டியலிடுமாறு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று முறையிட்டனர். இதனையடுத்து அந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று நடைபெறும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல்வர் பங்கேற்பாரா?

இத்தகைய சூழ்நிலையில், திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன என்பதால், திமுகவும் நிச்சயம் பங்கேற்காது என்றே தெரிகிறது. அதே சமயம், கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று பங்கேற்றது போல் வருகிற குடியரசு தினத்தன்று அரசு சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இந்த முறை பங்கேற்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

குடியரசு தினத்துக்கு இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில், இது குறித்த அறிவிப்பு திமுக மற்றும் அரசு தரப்பிலிருந்து விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின்…

எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளும்

அதே சமயம், கடந்த ஆண்டு சுதந்திர தின தேநீர் விருந்தில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பாமக சார்பில் ஜி.கே.மணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். அதேபோன்று இந்த குடியரசு தின தேநீர் விருந்திலும் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

乌龙茶. Ip cam nvr 系統設定服務. How is silicon valley addressing ethical concerns around ai ?.