நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: மீட்புக் குழுக்கள் தீவிர முன்னேற்பாடு!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதையொட்டி, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) தீவிர முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, இரண்டு NDRF குழுக்கள் (60 பேர்) மீட்பு உபகரணங்களுடன் நீலகிரி மற்றும் கோவையில் களமிறங்கியுள்ளன.
நீலகிரியில் மூன்று SDRF குழுக்களும், கோவையில் இரண்டு குழுக்களும் முன்னெச்சரிக்கை பணிகளை தொடங்கியுள்ளன. மீட்பு குழுக்கள் விரைந்து செயல்படுவதற்காக அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டையில் இருந்து உயர் திறன் வாய்ந்த படகுகள், கயிறுகள், மரம் வெட்டும் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர்கள், தீயணைப்பு, மின்சாரம், நெடுஞ்சாலைத் துறைகளுடன் இணைந்து முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மலைப்பகுதிகளில் மண்சரிவு, வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பயணத்தை தவிர்க்கவும், பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்