ரவி மோகன் பிரிவு… ஆர்த்தி சொல்லும் புதிய குற்றச்சாட்டுகள்..!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரவி மோகன் – பாடகி கெனிஷா பிரான்சிஸ் உடனான தொடர்பு மற்றும் அவரது மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
சர்ச்சையின் தொடக்கம்:ரவி மோகன் மற்றும் ஆர்த்தி 2009-ல் திருமணம் செய்து கொண்டனர், இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 2024 செப்டம்பரில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்நிலையில், சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவின் திருமண விழாவில் ரவி மோகன், கெனிஷாவுடன் ஜோடியாக தோன்றியது, இணையத்தில் வைரலாகி, சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியது.
இதற்கு ஆர்த்தி கடுமையான அறிக்கை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து ரவி மோகன், கெனிஷா மற்றும் ஆர்த்தியின் தாயார் சுஜாதா ஆகியோரும் அறிக்கைகளை வெளியிட்டனர்.
ரவி மோகனின் பதிலடி:மே 15 அன்று ரவி மோகன் வெளியிட்ட அறிக்கையில், “கெனிஷா என் வாழ்க்கையில் ஒளி கொண்டு வந்தவர். நீரில் மூழ்கிக் கொண்டிருந்த என்னை காப்பாற்றியவர். ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை பொருளாதார ரீதியாக பயன்படுத்தினர். 100 கோடி கடனுக்கு ஜாமீன் போட வைத்தனர்,” என்று குற்றம்சாட்டினார். மேலும், தனது மகன்களை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும், சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.
கெனிஷாவின் பதில்:இந்த சர்ச்சைக்கு மத்தியில், மே 19 அன்று கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிபூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டார்: “இந்த சத்தங்களுக்கு மத்தியில் அமைதியான நம்பிக்கை காத்திருக்கிறது. என் ஆன்மாவின் கஷ்டங்கள் தனியாக நிற்கின்றன, ஆனால் அவை மன உறுதியை அளிக்கின்றன. இசையை பிடித்து, காயங்களை பாடங்களாக ஏற்று, நாளைய விடியலை நோக்கி பயணிக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு, ஆர்த்தியின் குற்றச்சாட்டுகளுக்கு மறைமுக பதிலாக பார்க்கப்பட்டது.
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஆர்த்தியின் தாயார்:இந்த நிலையில், ரவி மோகனின் “100 கோடி கடனுக்கு ஜாமீன் போட வைத்தனர்’ என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் , “எங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக ரவி மோகனும் ஆர்த்தியும் இணைந்து வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். 100 கோடி கடனில் படம் எடுத்தது ரவிக்காகவே,” என்று அறிக்கை வெளியிட்டார். இது இணையத்தில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியது.

திரையுலகின் எதிர்வினை:
நடிகைகள் ராதிகா, குஷ்பூ ஆகியோர் ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்தனர், அதேவேளை பாடகி சுசித்ரா, ரவி மோகன் மற்றும் கெனிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். “ரவி மற்றும் கெனிஷா என்ன தவறு செய்தனர்? சினிமாவில் இது புதிதல்ல,” என்று சுசித்ரா கூறினார். எக்ஸ் தளத்தில், ரசிகர்கள் இரு தரப்பையும் விமர்சித்து பதிவுகள் இட்டு வந்தனர், சிலர் ஆர்த்தியின் வலியை புரிந்து கொள்ள, மற்றவர்கள் ரவியின் தனிப்பட்ட முடிவை ஆதரிக்கின்றனர்.
“விவாகரத்துக்கு முன்பே வந்த 3-வது நபர்…” – ஆர்த்தியின் புதிய குற்றச்சாட்டு
இந்த நிலையில் தான், ரவி மோகன் பிரிவுக்கு 3 வது நபரின் வருகையே காரணம் எனக் கூறி, புதிய குற்றச்சாட்டுகளுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆர்த்தி, “உங்கள் வாழ்வின் ஒளி என அறியப்படும் அவர் எங்கள் வாழ்வில் இருளை கொண்டுவந்தார் என்பதே உண்மை. சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் முன்பே 3-வது நபர் எங்கள் வாழ்வில் வந்துவிட்டார். எங்கள் வாழ்வில் 3-வது நபரின் வருகையை வெற்றுக் குற்றச்சாட்டாக அல்ல மாறாக போதுமான ஆதாரத்துடன் தான் கூறுகிறேன்.
கண்ணியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை விட நாடகம் போடுபவர்களுக்கே அதிக இடம் உள்ளது இந்த காலத்தில். என்னை சுற்றி நடக்கும் சமீபத்திய சூழ்ச்சிகளால் வேறு வழியின்றி என்னை மீண்டும் பேசும்படி செய்துவிட்டது. என் பிடியிலிருந்து தப்ப நினைத்தால் அவர் தொலைத்ததாக கூறும் பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்?
எங்கள் வாழ்வில் அதிக சேதத்தை உண்டாக்கியவர் வீட்டின் கதவை ஏன் தட்டினார்.துன்புறுத்தப்பட்டதாக தனிமைப்படுத்தப்பட்டதாக கூறும் ரவி ஏன் ஒவ்வொரு வருடமும் திருமண நாளை கொண்டாடினார்” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
ரவி மோகன், ஆர்த்தி மற்றும் கெனிஷா இடையேயான இந்த சர்ச்சை, தமிழ் திரையுலகத்திலும் மற்றும் சமூக வலைதள விவாதங்களிலும் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
