Rain Alert | இந்த மாவட்டங்களுக்கு மே 29, 30ல் ‘ரெட் அலர்ட்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சென்னை வானிலை ஆய்வு மையம் (RMC), நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளுக்கு மே 29 மற்றும் 30, 2025 ஆகிய இரு நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இதனால், 204.5 மி.மீ-க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று (மே 28) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, மற்றும் திருநெல்வேலி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாகவும், இது தென்மேற்கு பருவமழையை மேலும் தீவிரப்படுத்தும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நிலச்சரிவு, திடீர் வெள்ளம், மற்றும் நீர்தேக்கம் போன்ற ஆபத்துகள் ஏற்படலாம்.
தேனி, தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று பகுதி மேகமூட்டத்துடன் லேசான முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.
நீலகிரி மற்றும் கோவையில் மாநில பேரிடர் மீட்பு படை (SDRF) மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மலைப்பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களில் மக்களை வெளியேற்ற தயாராக உள்ளனர். பள்ளி கட்டடங்கள் மற்றும் நிவாரண முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.