சொத்து உரிமை: பத்திரப்பதிவு மட்டும் போதாது – உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு!

சொத்து உரிமை தொடர்பாக உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது.
பத்திரப்பதிவு செய்தாலும், அது மட்டும் சொத்துக்கு முழு உரிமையை உறுதிப்படுத்தாது என்றும், சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களும் முழுமையாக இருந்தால் மட்டுமே உரிமையாளராக முடியும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு, சொத்து உரிமையாளர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பத்திரப்பதிவு ஆவணங்கள் துணை ஆதாரமாக மட்டுமே கருதப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. சொத்தின் மீது வங்கிக் கடன், சட்டச் சிக்கல்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த தடையில்லா சான்றிதழ் (EC), சொத்து வரி செலுத்திய ரசீதுகள் உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயம் தேவை. சொத்து வாங்குவோர் இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டும்.
பத்திரப்பதிவு மட்டும் உரிமைக்கு போதுமானதல்ல; சொத்தை முழுமையாகப் பயன்படுத்தவோ, மாற்றவோ மற்ற ஆவணங்கள் அவசியம். சொத்தின் சர்வே எண்கள், மாநில அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் விவரங்கள், விற்பனை ஒப்பந்தம் (Sale Agreement) ஆகியவை முக்கியம். விற்பனை ஒப்பந்தத்தில் சொத்தின் மதிப்பு, நிபந்தனைகள், விற்பவர் மற்றும் வாங்குபவரின் கையொப்பங்கள், சாட்சிகளின் கையொப்பங்கள், ஸ்டாம்ப் கட்டணம், பத்திரப்பதிவு விவரங்கள் ஆகியவை இடம்பெற வேண்டும்.
இந்தத் தீர்ப்பு, சொத்து உரிமை சிக்கல்களைத் தெளிவாக்கி, வாங்குபவர்கள் முழுமையான ஆவணங்களை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. சொத்து பரிவர்த்தனைகளில் விழிப்புடன் செயல்படுவது, எதிர்கால சட்டப் பிரச்னைகளைத் தவிர்க்க உதவும்.