ஆளுநர் விவகாரம்: “காலக்கெடு விதிக்க முடியுமா? – உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் 14 கேள்விகள்!
ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் செய்ததாக கூறி, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதம் என்றும், மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என்றும் கடந்த ஏப்ரல் 8 அன்று தீர்ப்பளித்தது.
மேலும், அரசியல் சாசனப் பிரிவு 142-ஐப் பயன்படுத்தி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை நிறைவேற்றப்பட்டதாகவும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இதனையடுத்து, நீதித்துறை குடியரசுத் தலைவரின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளதாக பாஜக தரப்பில் விமர்சிக்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், “குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது” எனத் தெரிவித்து இருந்தார். இதுவும் சர்சையானது.
இந்தப் பின்னணியில் குடியரசுத் தலைவர் முர்மு, மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்க முடியுமா என்பது குறித்து14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளார்.
குடியரசுத் தலைவர் எழுப்பி உள்ள 14 கேள்விகள்
“அரசியல் சாசனப் பிரிவு 200 மற்றும் 201-ன் கீழ் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் முடிவுகள், மசோதா சட்டமாகும் முன் நீதி விசாரணைக்கு உட்பட்டவையா?”
“மசோதா சட்டமாகும் முன் அதன் உள்ளடக்கங்களை நீதிமன்றங்கள் எந்த வகையிலும் ஆய்வு செய்ய முடியுமா?”
“குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் அரசியல் சாசன அதிகாரங்கள் மற்றும் உத்தரவுகளை, பிரிவு 142-ஐப் பயன்படுத்தி மாற்ற முடியுமா?”
“மாநில சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாகக் கருதப்படுமா?”
“பிரிவு 145(3)-ன் படி, அரசியல் சாசன விளக்கம் தொடர்பான முக்கிய சட்ட கேள்விகள் ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட வேண்டுமா?”
“பிரிவு 142-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள், நடைமுறைச் சட்டங்களுக்கு மட்டுமா, அல்லது அரசியல் சாசனம் அல்லது சட்ட விதிகளுக்கு முரணான உத்தரவுகளை வழங்க முடியுமா?”
“மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்சினைகளை தீர்க்க, பிரிவு 131-ஐத் தவிர உச்ச நீதிமன்றத்திற்கு வேறு அதிகாரங்கள் உள்ளனவா?”
“மாநில சட்டமன்றத்தின் இறையாண்மையை பாதிக்கும் வகையில், ஆளுநரின் தாமதங்கள் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டவையா?”
“நீதித்துறை, ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவரின் விருப்புரிமைகளுக்கு காலக்கெடு விதிக்கும் அதிகாரம் கொண்டதா?”
“மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படாத பட்சத்தில், நீதித்துறை அதை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்க முடியுமா?”
“அரசியல் சாசனத்தில் காலக்கெடு குறிப்பிடப்படாத நிலையில், நீதித்துறை உத்தரவுகள் மூலம் காலக்கெடு விதிப்பது செல்லுபடியாகுமா?”

“மாநில அரசு மற்றும் ஆளுநருக்கு இடையேயான மோதல்களை நீதித்துறை எவ்வாறு அணுக வேண்டும்?”
“பிரிவு 142-ஐப் பயன்படுத்தி, நீதித்துறை நிர்வாகத்தின் அதிகாரங்களை மறு ஆய்வு செய்ய முடியுமா?”
“ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் முடிவுகள், அரசியல் சாசனத்தின் எல்லைகளுக்கு உட்பட்டவையா, அல்லது நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்பட்டவையா?”
நீதித்துறை-நிர்வாக அதிகாரம்
குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள், நீதித்துறையின் பிரிவு 142 அதிகாரங்கள், ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் விருப்புரிமைகள், மற்றும் மத்திய-மாநில உறவுகளுக்கு இடையேயான சமநிலையை ஆராய்கின்றன. இந்த நிலையில், குடியரசு தலைவரின் கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் எந்த விதமான கருத்தை தெரிவிக்கப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் தெரிவிக்கும் கருத்தைப் பொறுத்தே இந்திய ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான அதிகாரப் பகிர்வு கொள்கை மறுவரையறை செய்யப்படும்.
