இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கும் பாகிஸ்தான்!
டி20 உலகக் கோப்பை 2026, இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கும் பாகிஸ்தான் – ஐசிசி அதிரடி எச்சரிக்கை!
இந்தியா மற்றும் இலங்கையில் வரும் மார்ச் மாதம் வரை நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியாவுடன் மோதப்போவதில்லை என்ற பாகிஸ்தான் அரசின் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தொடரில் மொத்தம் 20 நாடுகள் பங்கேற்கும் நிலையில், உலகக் கோப்பையில் ஆடுவோம் ஆனால் இந்தியாவுக்கு எதிராக மட்டும் விளையாட மாட்டோம் என்ற பாகிஸ்தானின் முரண்பட்ட முடிவுக்குச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவை மறுபரிசீலனை செய்யத் தவறினால் வருவாய் பகிர்வு நிறுத்தம், சர்வதேச போட்டிகளை நடத்தத் தடை மற்றும் பி.எஸ்.எல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கத் தடை போன்ற கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என ஐசிசி எச்சரித்துள்ளது.
திட்டமிட்டபடி மார்ச் 15-ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்கத் தவறினால், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முன்னிலையில் நடுவர்கள் இந்திய அணிக்கு 2 புள்ளிகளை வழங்குவார்கள். இத்தகைய சூழலிலும், உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காகப் பாகிஸ்தான் அணி இலங்கை புறப்பட்டுச் சென்றுள்ளதால், களத்தில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
