யுனெஸ்கோ பட்டியலில் இடம் பிடிக்கிறது மேகாலயாவின் புகழ்பெற்ற வாழும் வேர் பாலங்கள்
மேகாலயாவின் உலகப்புகழ் பெற்ற ‘வாழும் வேர் பாலங்களை’ யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் சேர்க்க இந்தியா அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரை செய்துள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த காடுகளையும், மேகங்கள் முத்தமிடும் அதிக மழைப்பொழிவையும் கொண்ட இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயா, உலகப் புகழ்பெற்ற ஓர் இயற்கைச் சொர்க்கமாகும். இங்கு வசிக்கும் காசி மற்றும் ஜெயந்தியா மலைவாழ் பழங்குடியின மக்கள், நவீன தொழில்நுட்பங்களுக்கே சவால் விடும் வகையில், இயற்கையோடு இணைந்த ‘வாழும் வேர் பாலங்களை’ உருவாக்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.
புவியியல் ரீதியாக அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படும் மேகாலயாவில், கான்கிரீட் அல்லது இரும்புப் பாலங்களை நிலைநிறுத்துவது கடினமான காரியமாகும். இதற்கு மாற்றாக, ஆற்றின் இருபுறமும் வளரும் ரப்பர் மரங்களின் வேர்களை மூங்கில் சட்டங்களின் துணையோடு பிணைத்து, அவற்றை உறுதியான பாலங்களாக மாற்றும் வித்தையை இப்பகுதி மக்கள் கையாண்டு வருகின்றனர். பல நூற்றாண்டுகள் கடந்தும் வலுவாக இருக்கும் இந்தப் பாலங்கள், மனித அறிவிற்கும் இயற்கையின் ஆற்றலுக்கும் இடையிலான உன்னதப் பிணைப்பிற்குச் சான்றாகும்.
இந்த அபூர்வமான வாழ்வியல் அதிசயத்தை, 2026-27-ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோ,உலக பாரம்பரியத் தளங்களின் பட்டியலில் சேர்க்க இந்தியா முறைப்படி பரிந்துரை செய்துள்ளது. பாரீஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா கூறுகையில், “யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைப்பதன் மூலம், இந்த இயற்கை பாரம்பரியத்தைத் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வரும் பழங்குடியின மக்களுக்கு உலகளாவிய கௌரவம் கிடைப்பது உறுதி செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரத் துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் யுனெஸ்கோ அமைப்பு, உலக அளவில் தனித்துவம் வாய்ந்த இயற்கை மற்றும் பண்பாட்டுச் சின்னங்களை அடையாளம் கண்டு அவற்றைப் பாதுகாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேகாலயாவின் இந்த நூற்றுக்கணக்கான வேர் பாலங்கள் சர்வதேசப் பட்டியலில் இணையும்போது, அப்பகுதியின் சுற்றுலாவும் பாதுகாப்பும் புதிய உச்சத்தை எட்டும்.
