இனி ஆதார் கார்டு வேண்டாம்!
வங்கி, தபால் நிலையம், அரசு அலுவலகங்கள் என எங்குச் சென்றாலும் இனி அசல் ஆதார் அட்டையைக் கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிமுகப்படுத்தியுள்ள ‘எம்-ஆதார்’ (mAadhaar) செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் தரவிறக்கம் செய்துகொண்டாலே போதும்.
இந்தச் செயலி மூலம் உங்கள் ஆதார் விவரங்களை டிஜிட்டல் முறையில் அதிகாரிகளிடம் காண்பிக்கவோ, தேவைப்படும் இடங்களில் கியூ.ஆர் (QR) கோடு மூலம் பகிரவோ அல்லது உடனடியாகப் பிரிண்ட் எடுத்துக்கொள்ளவோ முடியும். குறிப்பாக, உங்கள் ஆதார் எண் முழுவதையும் காட்டாமல், அடையாளத்தை மட்டும் உறுதிப்படுத்தும் ‘Mask Data’ வசதி இதில் இருப்பதால் தனியுரிமைக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது.
இந்தச் செயலியைப் பயன்படுத்த, கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து, உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் முக அங்கீகாரம் (Face Authentication) மூலம் எளிதாக லாக்-இன் செய்யலாம். பாதுகாப்பிற்காக 6 இலக்கப் பின் (PIN) நம்பரை உருவாக்கிக் கொள்ளலாம்.
இதில் மற்றொரு முக்கிய வசதியாக, உங்களின் ஆதார் அட்டையை மட்டுமல்லாமல், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் வரையிலான ஆதார் விவரங்களையும் ஒரே செயலியில் ‘Add Profile’ மூலம் இணைத்து வைத்துக்கொள்ள முடியும்.
மேலும், உங்கள் கைரேகை மற்றும் கருவிழித் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க ‘Bio Lock’ வசதியும், சமீபத்தில் உங்கள் ஆதார் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள ‘Recent Transaction’ வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இனி பர்ஸில் இடத்தை அடைக்கும் ஆதார் அட்டைக்கு விடை கொடுத்துவிட்டு, பாதுகாப்பான இந்தச் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.
