ஐதராபாத் வருகிறார் லியோனல் மெஸ்சி: தெலுங்கானா முதலமைச்சர் அறிவிப்பு!
லியோனல் மெஸ்சி டிசம்பர் 13ஆம் தேதி ஐதராபாத் வருகிறார் என்று தெலுங்கானா முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக விளங்குபவர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினா அணியின் கேப்டனாக உள்ள அவர், தனது தலைமையில் அர்ஜென்டினா அணியை உலகக்கோப்பை வெற்றிக்குத் தூண்டினார்.
இந்நிலையில், அர்ஜென்டினா–ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான நட்பு போட்டி நவம்பர் 17-ஆம் தேதி கொச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் அதன் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக, போட்டியை ஸ்பான்சர் செய்யும் தனியார் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் மெஸ்சியை நேரில் காண காத்திருந்த ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த மாதம் மெஸ்சி ஐதராபாத் வருகிறார் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், லியோனல் மெஸ்சி டிசம்பர் 13-ஆம் தேதி ஐதராபாத் வருகிறார்; அரசு பள்ளி மாணவர்களுடன் கால்பந்து விளையாட உள்ளார். மெஸ்சியை வரவேற்க தெலங்கானா முழுமையாக தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மெஸ்சியுடன் ‘Friendly Match’ விளையாடுவதற்காக முதல்வர் ரேவந்த் ரெட்டி இரவு நேரப் பயிற்சியில் ஈடுபடும் காட்சி வெளியாகியுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
