குலசேகரன்பட்டினம் கடற்கரையில் அதிகரிக்கும் கடல் அரிப்பு – அழியும் பனை மரங்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்மிகச் சிறப்பு வாய்ந்த முத்தாரம்மன் கோவில் மற்றும் நாட்டின் இரண்டாவது இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமையவிருக்கும் குலசேகரன்பட்டினம் கடற்கரைப் பகுதி, அண்மைக்காலமாகத் தீவிரமான கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு வருகிறது. வரும் 2027-ல் ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்படவுள்ள இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரையில், பருவநிலை மாற்றம் மற்றும் கடல் சீற்றத்தின் காரணமாக மண் அரிப்பு அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, கடற்கரை ஓரத்தில் இருந்த பனை மரங்கள் வேரோடு சாய்ந்து அழிந்து வருவது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களின் தேசிய மரமான பனை, புயல் மற்றும் கடல் நீர் ஊருக்குள் புகுவதைத் தடுக்கும் அரணாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தியாவில் அதிகபட்சமாகத் தூத்துக்குடி மாவட்டத்தில்தான் 2 கோடிக்கும் அதிகமான பனை மரங்கள் உள்ளன. இந்த மரங்களை அரசு பாதுகாக்கப் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தற்போது குலசேகரன்பட்டினத்தில் நன்கு வளர்ந்த பனை மரங்கள் அழிந்து வருவது வருத்தமளிக்கிறது.
தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் எஸ்.ஜே. கென்னடி இதுகுறித்து கூறுகையில், “திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் பகுதிகளில் கடல் சீற்றத்தால் அரிப்பு அதிகரித்து வருகிறது. பல ஆண்டுகள் வளர்ந்த மரங்கள் அழிவது கடற்கரைப் பகுதிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். தூத்துக்குடியில் 1 கோடி பனை விதைகள் நடவு செய்யும் பணியைத் தொடங்கியுள்ளோம். இருப்பினும், ஏற்கனவே வளர்ந்த மரங்களை அழிவிலிருந்து பாதுகாக்க, மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கடல் அரிப்பைத் தடுக்கும் நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார்.
