கோழிக்கோடு: 3-வது நாளாக எரியும் சரக்கு கப்பல்!
கேரளாவின் கோழிக்கோடு அருகே, நடுக்கடலில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற MV Wan Hai 503 கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க மூன்றாம் நாளாக இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
இந்தக் கப்பல், கொழும்பில் இருந்து மும்பை செல்லும் வழியில், பேப்பூர் கடற்கரையிலிருந்து சுமார் 70 கடல் மைல் தொலைவில் தீப்பற்றியது.
கப்பலில் மொத்தம் 1,754 கண்டெய்னர்கள் உள்ளன, இதில் 671 கண்டெய்னர்கள் மேற்புரமும், 1,083 கண்டெய்னர்கள் அடிப்புரமும் உள்ளன. மேலும், 2,000 டன் எண்ணெய் மற்றும் 240 டன் டீசல் எரிபொருள் உள்ளதால், தீ மேலும் பரவி கப்பல் முழுமையாக எரியும் அபாயம் நீடிக்கிறது.
இதில் 157 கண்டெய்னர்களில் 32.2 டன் நைட்ரோசெல்லுலோஸ் உள்ளிட்ட ஆபத்தான ரசாயனப் பொருட்கள் இருப்பது சுற்றுச்சூழல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கப்பல் இன்னும் மூழ்கவில்லை என்றாலும், தீயின் தீவிரம் மற்றும் ஆபத்தான பொருட்கள் காரணமாக மீட்பு நடவடிக்கைகள் சவாலாக உள்ளன. 22 பணியாளர்களில் 18 பேர் மீட்கப்பட்டு, 5 பேர் காயமடைந்தனர், இதில் 2 பேர் பலத்த தீக்காயங்களுடன் உள்ளனர். 4 பேர் இன்னும் காணவில்லை.
இந்திய கடற்படையின் INS சுஜாதா, INS விக்ராந்த் மற்றும் கடலோர காவல்படையின் சமர்த் உள்ளிட்டவை மீட்பு மற்றும் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்திய தேசிய கடல் தகவல் மையம் (INCOIS) எச்சரித்துள்ளபடி, 10-15 கண்டெய்னர்கள் கடலில் மிதந்து, கோழிக்கோடு மற்றும் கொச்சி இடையே கரை ஒதுங்க வாய்ப்புள்ளது. 100 டன் எண்ணெய் கசிவு ஏற்படலாம் என்ற அச்சமும் உள்ளது.