கொச்சி கப்பல் விபத்து – பேரிடராக அறிவித்த கேரள அரசு!
கப்பல் விபத்து காரணமாக எண்ணெய் மற்றும் ரசாயன கசிவு அச்சுறுத்தலால், கேரள அரசு இதை பேரிடராக அறிவித்து, மீட்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
கேரளாவின் கொச்சி கடற்கரை அருகே லிபரியா கொடியுடன் கூடிய ‘MSC ELSA 3’ என்ற சரக்கு கப்பல் மூழ்கிய விபத்தை கேரள அரசு மாநில பேரிடராக அறிவித்துள்ளது. விசின்ஜம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்கு செல்லும் வழியில், மே 24, 2025 அன்று 38 கடல் மைல் தொலைவில் கப்பல் 26 டிகிரி சாய்ந்து, ஒரு பகுதியில் தண்ணீர் புகுந்ததால் மூழ்கியது. இதனால், கடலில் எண்ணெய் கசிவு மற்றும் ரசாயனப் பொருட்கள் பரவியுள்ள நிலையில், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மற்றும் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (KSDMA) ஆகியவை, கப்பலில் இருந்த 640 கண்டெய்னர்களில், 13 ஆபத்தான ரசாயனப் பொருட்களையும், 12 கால்சியம் கார்பைடையும் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளன. மேலும், 84.44 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 367.1 மெட்ரிக் டன் பர்னஸ் எண்ணெயும் கப்பலில் இருந்தது. இவை கடலில் கலந்தால், மீன்வளம் மற்றும் கடலோர சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பை சந்திக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்திய கடலோர காவல்படை (ICG) 21 பணியாளர்களை மீட்டது, மேலும் கேப்டன் மற்றும் இரு பொறியாளர்கள் உட்பட மூன்று பேர் ஞாயிறு காலை INS சுஜாதா கப்பல் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தற்போது, ‘சக்ஷம்’ என்ற மாசு கட்டுப்பாட்டு கப்பல் மற்றும் டார்னியர் விமானம் மூலம் எண்ணெய் கசிவை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், மற்றும் திருவனந்தபுரம் கடற்கரைகளில் கண்டெய்னர்கள் கரை ஒதுங்கியுள்ளன.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான உயர்மட்ட கூட்டத்தில், மக்கள் கண்டெய்னர்களை தொடவோ, அணுகவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் 20 கடல் மைல் தூரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.