ஆகாயத் தாமரையில் இருந்து சானிட்டரி நாப்கின் – கரூர் மாணவிகள் சாதனை!

New Project - 2025-12-16T122136.907

சுற்றுச்சூழலுக்குப் பெரிய சவாலாக விளங்கும் ஆகாயத் தாமரையை மூலப்பொருளாகப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து, கரூர் தனியார் பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கணித அறிவியல் மன்றம் மற்றும் புதுடெல்லி அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய மண்டல அளவிலான 34-வது குழந்தைகள் அறிவியல் மாநாடு திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 

இதில் தேர்வாகும் ஆய்வுக் கட்டுரைகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகும்.இதில் கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவிகளான ஹிவன்ஷிகா மற்றும் சஞ்சிதா ஆகியோர், தங்கள் ஆசிரியர் ஜெ. ராஜசேகரன் வழிகாட்டுதலுடன் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தனர். இந்த ஆய்வு, மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மண்டல அளவிலும் தேர்வாகி, தற்போது மாநில அளவிலான போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மாணவிகள் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு “ஆகாயத் தாமரையிலிருந்து பயனுள்ள பொருட்கள்” என்பதாகும். இதன் மூலம், சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் ஆகாயத் தாமரைத் தாவரத்தின் அதிக நீர் உறிஞ்சும் தன்மையைப் பயன்படுத்தி சானிட்டரி நாப்கின்கள், மட்கக்கூடிய காகிதங்கள் (Degradable Papers), அட்டைப் பெட்டிகள் ஆகியவற்றைத் தயாரிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். 

ஆய்வுக் குறித்து மாணவிகள் ஹிவன்ஷிகா, சஞ்சிதா கூறியது: “ஆகாயத்தாமரை சுற்றுச்சூழலில் பல எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. இதை ஒரு சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினையாக மட்டும் பார்க்காமல் அதற்கான தீர்வுகளுக்கு முயற்சி செய்தோம். இந்த ஆகாயத்தாமரை தாவரத்தின் தண்டு, மொட்டு போன்ற பகுதியை ஆய்வு செய்தோம்.

 இந்த தாவரம் அதிகளவு நீரை உறிஞ்சக்கூடிய தன்மையுடன் உள்ளது. மேலும், இதை அரைத்து அதை உலர செய்து சானிட்டரி நாப்கின்கள், காகித அட்டை பெட்டி போன்ற மட்கக்கூடிய பொருட்களை உருவாக்கினோம். இதன் உறிஞ்சும் திறன், அமிலத்தன்மையை ஆய்வகத்தில் பரிசோதனை செய்தோம். மேலும், இதில் 30 சதவீத செல்லுலோஸ் என்ற பொருள் இருப்பதால் இதை பேப்பர் போன்ற பொருளாக மாற்றுவது எளிது.” 

அவர்கள் மேலும் கூறுகையில், “பொதுவாகன சானிட்டரி நாப்கின்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களை மூலதனமாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பிரச்சினைகள் உருவாகின.

 இதுபோன்ற இயற்கை சார்ந்த பொருட்களால் சானிட்டரி நாப்கின் உருவாக்கும்போது, அது உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் உள்ளது. இயற்கை கழிவான ஆகாயத்தாமரையை பயன்படுத்தி இது மாதிரியான பொருட்களை நாம் தயாரிக்கும்போது, உற்பத்தி செலவு மிகவும் குறையும். மேலும், சுற்றுச்சூழல், மட்கக்கூடிய பொருட்கள் ஆகிய இரு தீர்வுகள் கிடைக்கின்றன,” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ai blog : create content automatically and earn. Just a moment.... Hawaii car transport.