நாக்பூர் பல்கலை ‘டு’ உச்ச நீதிமன்றம்… தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் வழங்கிய முக்கிய தீர்ப்புகள்!

இந்தியாவின் 52 ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் எனும் பூஷன் ராமகிருஷ்ண கவாய், இன்று பதவியேற்றார். இவர் இந்தியாவின் முதல் பௌத்த மதத்தைச் சேர்ந்த தலைமை நீதிபதியாகவும், பட்டியல் சாதியைச் சேர்ந்த இரண்டாவது நீதிபதியாகவும் இந்த உயரிய பதவிக்கு உயர்ந்துள்ளார்.
நீதிபதி பி.ஆர். கவாய், இந்த ஆண்டு நவம்பர் 23 அன்று ஓய்வு பெறும் வரை தலைமை நீதிபதியாக பணியாற்றுவார். இவரது பதவிக்காலத்தில், அவர் வழங்கும் தீர்ப்புகள் மட்டுமல்லாமல், அவர் உருவாக்கும் மரபும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.
வழங்கிய முக்கிய தீர்ப்புகள்
நீதிபதி கவாய், பல முக்கியமான வழக்குகளில் அமர்வுகளுக்கு தலைமை தாங்கியவர். புல்டோஸர் நடவடிக்கைகளைக் கண்டித்து, அவற்றைக் கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகளை வகுத்த அமர்வில் இவர் பங்கேற்றார். மேலும், அரசியலமைப்பு அமர்வில் இடம்பெற்று, பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இவற்றில், அரசியலமைப்பு பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை உறுதி செய்தது, தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து, மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை உறுதிப்படுத்தியது போன்றவை அடங்கும்.
மேலும், நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு தான், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு பணமோசடி வழக்கில் ஜாமீன் வழங்கியது. இந்தத் தீர்ப்பு, அதே வழக்கில் மற்ற குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்குவதற்கு அடிப்படையாக அமைந்தது. மேலும், ராகுல் காந்தியின் மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் தண்டனையை நிறுத்தி வைத்து, அவருக்கு நிரந்தர ஜாமீன் வழங்கிய அமர்வையும் இவர் வழிநடத்தினார். 2002 கோத்ரா கலவரம் தொடர்பான வழக்கில் சிவில் உரிமை ஆர்வலர் தீஸ்தா அதுல் சேதல்வாட்டுக்கு நிரந்தர ஜாமீன் வழங்கியதும் இவரது தலைமையிலேயே நடைபெற்றது.
நீதிபதி கவாயின் தலைமையில், இந்திய நீதித்துறை மேலும் வலுவடையும் என்பது பரவலான எதிர்பார்ப்பாக உள்ளது.
குடும்ப பின்னணி
நீதிபதி பி.ஆர். கவாய், 1960, நவம்பர் 24 அன்று மகாராஷ்டிராவின் அமராவதியில் பிறந்தவர். இவரது குடும்பம் சமூக, பொது சேவையிலும் ஆழமான பங்களிப்பு கொண்டது. இவரது தந்தை, ராமகிருஷ்ண சூர்யபன் கவாய், அம்பேத்கரிய தலைவராகவும், இந்திய குடியரசுக் கட்சி (கவாய்) நிறுவனராகவும், முன்னாள் பீகார் ஆளுநராகவும் இருந்தவர். இவரது தாயார் கமலா கவாய், இல்லத்தரசி. நீதிபதி கவாய்க்கு ஒரு சகோதரர், ராஜேந்திர கவாய் (அரசியல்வாதி, மருத்துவரும்) மற்றும் கீர்த்தி என்ற ஒரு சகோதரி உள்ளனர். மனைவி பெயர் தேஜஸ்வினி கவாய். இவர்களுக்கு கரிஷ்மா என்ற மகள் உள்ளார்.
நாக்பூர் பல்கலை ‘டு’ உச்ச நீதிமன்றம்
நீதிபதி கவாய், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கலை மற்றும் சட்ட இளங்கலை (B.A.,LL.B) பட்டங்களைப் பெற்றார். 1985 ஆம் ஆண்டு மார்ச் 16 ல் வழக்கறிஞராகப் பதிவு செய்து, பாம்பே உயர் நீதிமன்றத்தில் ராஜா எஸ். பொன்ஸ்லேவின் கீழ் தனது சட்டப் பயணத்தைத் தொடங்கினார். 1987 முதல் 1990 வரை பாம்பே உயர் நீதிமன்றத்தில் தனியாக வழக்கறிஞர் தொழிலை செய்தார். பின்னர் நாக்பூர் கிளையில் அரசியலமைப்பு மற்றும் நிர்வாக சட்டத்தில் கவனம் செலுத்தினார். 2003 ஆம் ஆண்டு பாம்பே உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 2005 இல் நிரந்தர நீதிபதியானார். 2019 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த இவர், இன்று இந்தியாவின் 52 ஆவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ளார்.