கோவையில் நடைபெற்ற ஈஷா மகா சிவராத்திரி!
கோவையில் நடைபெற்ற ஈஷா மகா சிவராத்திரி விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நடிகை தமன்னா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன
கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி விழா, இந்தாண்டும் பக்திப் பரவசத்துடன் அரங்கேறியது. உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்ட இந்த விழாவில், இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார். ஆதியோகி சிலைக்கு முன்பாக நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் தியான நிகழ்வுகளில் அவர் ஆர்வத்துடன் பங்கேற்றார்.
ஒவ்வொரு ஆண்டும் ஈஷா சிவராத்திரி விழாவில் சினிமா நட்சத்திரங்களின் வருகை ஒரு முக்கிய அங்கமாக இருக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு முன்னணி நடிகை தமன்னா, நடிகைகள் ஸ்ரீநிதி மற்றும் சாரா அர்ஜுன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். இரவு முழுவதும் நடைபெற்ற இந்த விழாவில், அவர்கள் சிவனை மனமுருகி வேண்டி தியானத்தில் ஈடுபட்டனர். திரைப்பிரபலங்கள் சாதாரண பக்தர்களைப் போல அமர்ந்து சிவபெருமானை தரிசித்த காட்சிகள் மற்றும் அவர்கள் நடனமாடிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இசை, நடனம் மற்றும் ஆன்மீகம் என முப்பது கோடிக்கும் அதிகமான மக்கள் நேரலையில் பார்த்த இந்த மகா சிவராத்திரி விழா, கோவையில் மீண்டும் ஒரு பிரம்மாண்டமான ஆன்மீக அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது.
