இந்தியாவிலேயே முதல்முறை! கீழடியில் தயாரான ‘திறந்தவெளி அருங்காட்சியகம்..
இந்தியாவிலேயே முதல்முறையாகக் கீழடியில் ரூ.22 கோடியில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு செய்யப்பட்ட இடங்கள், ‘திறந்தவெளி அருங்காட்சியகமாக’ மாற்றப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ.17.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுமார் 67,343 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு அரங்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கின.
இதில் ஏழாம் கட்ட அகழாய்வு நடந்த இடம் ஒரு அரங்கமாகவும்; இரண்டு, நான்கு மற்றும் ஆறாம் கட்ட அகழாய்வுகள் நடந்த இடங்கள் இரண்டாம் அரங்கமாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. தற்போது முதலாம் அரங்கம் மட்டும் திறப்பு விழாவிற்குத் தயாராகியுள்ள நிலையில், நாளை (பிப்ரவரி 13, 2026) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்தத் திறந்தவெளி அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்க உள்ளார்.
இந்தியாவிலேயே முதன்முறையாகக் கீழடியில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திறந்தவெளி அருங்காட்சியகத்தின் மொத்த திட்ட மதிப்பீடு, பணிகள் விரிவுபடுத்தப்பட்டதால் ரூ.17.80 கோடியிலிருந்து ரூ.22 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் பண்டைய காலத் தமிழர்களின் வாழ்வியல் முறைகள், அவர்கள் பயன்படுத்திய கருவிகள் மற்றும் அணிகலன்கள் போன்றவற்றை பொதுமக்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திலேயே நேரில் காணும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
