ஈரோடு இடைத்தேர்தல்: திமுக வெற்றியும் நாம் தமிழர் கட்சி போட்ட கணக்கும்!

ரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் எதிர்பார்த்தபடியே திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை இழந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், ‘இந்தியா’ கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மா.கி.சீதாலட்சுமி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் 13 வேட்பாளர்கள் மற்றும் 31 சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த நிலையில், இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8.30 மணிக்கு தொடங்கியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் எண்ணப்பட்டன.

திமுக வெற்றி

தொடக்கம் முதலே திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை வகித்து வந்த நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு மிக குறைவான வாக்குகளே கிடைத்து வந்தன.

இந்த நிலையில், அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு மாலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1,14,439 வாக்குகளை பெற்று, 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வி.சி.சந்திரகுமார் – சீதாலட்சுமி

டெபாசிட்டை இழந்த நாம் தமிழர் கட்சி

அவரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு 23,810 வாக்குகள் கிடைத்த நிலையில், அவர் டெபாசிட்டை இழந்தார். இந்த தேர்தலில், ஒரு கட்சி தன்னுடைய டெபாசிட்டை உறுதி செய்வதற்கு மொத்தம் 25,777 வாக்குகள் தேவையாக இருந்தன. ஆனால், அதைவிட குறைவான வாக்குகளே கிடைத்ததால், சீதாலட்சுமி உட்பட திமுக வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களும் தங்களது டெபாசிட்டை இழந்தனர். இந்த தேர்தலில், நோட்டாவுக்கு 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் கிடைத்துள்ளன.

நாம் தமிழர் கட்சி போட்ட கணக்கு

அதிமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிடாத நிலையில், அக்கட்சிகளின் வாக்குகள் கணிசமாக தங்களுக்கு கிடைக்கும் என நாம் தமிழர் கட்சி தரப்பில் எதிர்பார்ப்பு நிலவியது. வெற்றி பெற வாய்ப்பில்லை என்றபோதிலும், கவுரமான வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்பதும் அக்கட்சியின் எதிர்பார்ப்பாக இருந்தது.

அத்துடன் தந்தை பெரியார் குறித்து சமீபத்தில் சீமான் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே சமயம், பெரியார் மீதான தனது விமர்சனம் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் வாக்குகளை தங்கள் கட்சிக்கு பெற்றுத்தரும் என்ற எதிர்பார்ப்பும் சீமானுக்கு இருந்ததாக கூறப்பட்டது. அதன்படி பாஜக ஆதரவு வாக்குகள் ஓரளவுக்கு சீமான் கட்சிக்கு கிடைத்துள்ளது. ஆனால், அதிமுக உள்ளிட்ட இதர எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பெரிய அளவில் அக்கட்சிக்கு கிடைக்கவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

முன்னதாக பெரியார் மீதான விமர்சனத்தால் அதிருப்தியுற்ற மே 18 இயக்கத்தினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட பெரியாரிய ஆதரவாளர்கள் நாம் தமிழர் கட்சிக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டனர்.

அதிமுக வாக்குகள் யாருக்குப் போனது?

அதே சமயம் திமுக தரப்பில், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு டெபாசிட்டே கிடைத்துவிடக்கூடாது என்ற அளவுக்கு களப்பணிகளும் பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டன. கூடவே முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக வாக்குகளை தங்கள் கட்சிக்கு ஆதரவாக வளைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் ஒரு பகுதியாக அக்கட்சியின் முக்கிய உள்ளூர் நிர்வாகிகளை ‘சரி கட்டும்’ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதிமுக தரப்பிலும், நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளைப் பெறுவதை விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இவையெல்லாம் சேர்ந்தே நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Diese einfachen maßnahmen helfen, deine schnittblumen länger frisch und lebendig zu halten. Experienced trauma support. Facing wаr іn thе mіddlе eаѕt and ukraine, thе us lооkѕ fееblе.