பிச்சை போட்டால் ஜனவரி 1 முதல் வழக்கு… அமலுக்கு வரும் உத்தரவு!

Beggar 1200

நீங்கள் சாலையில் நடந்து செல்கிறீர்கள்… அப்போது ஒரு பிச்சைக்காரர் உங்களிடம் உதவி கேட்கிறார். நீங்களும் மனம் இரங்கி, உங்கள் பர்ஸை திறந்து நீங்கள் விருப்பப்பட்ட தொகையை கொடுக்கிறீர்கள். இது இரக்க குணம் கொண்ட பெரும்பாலானவர்கள் செய்யக்கூடியது தானே? ஆனால் அப்படி இரக்கப்பட்டு உதவினால் உங்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு வழக்குத் தொடரப்படும் என்றால், நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

“என்னடா இது..? ஒரு பிச்சைக்காரருக்கு பணம் கொடுத்து உதவுவது ஒரு குத்தமா..?” என வடிவேல் பாணியில் உங்கள் மனசுக்குள் கேட்டுக்கொள்வீர்கள் தானே..?

ஆமாங்க… குத்தம் தான். வருகிற ஜனவரி 1 ஆம் தேதி முதல் இப்படி ஒரு சட்டம் நடைமுறைக்கு வருகிறது. ஆனால், அது இங்கு இல்லை. மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில்.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கூற்றுப்படி, பிச்சை எடுப்பது ‘வறுமையின் தீவிர வடிவத்தை’ குறிக்கிறது. அப்படி இருக்கையில்,
இந்தூரில் ஏன், எதனால் இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது தானே?

அந்த கேள்விக்கான விடை மேற்கூறிய மத்திய அமைச்சகம் கொண்டு வந்துள்ள SMILE ((Support for Marginalized Individuals for Livelihood and Enterprise) என்ற திட்டம் தான் காரணம். “விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் நிறுவனம் சார்ந்த ஆதரவு” என்ற இந்த திட்டத்தின் நோக்கம், திருநங்கைகள் மற்றும் பிச்சை எடுக்கும் செயலில் ஈடுபட்டு உள்ள நபர்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவதாகும்.

இந்த திட்டத்தின் கீழ் இந்தூர் உட்பட 10 நகரங்களை பிச்சையெடுப்பவர்கள் இல்லாத நகரங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்தூரில் ஜனவரி 1 முதல் பிச்சை போட்டால் வழக்கு என்ற உத்தரவு அமலுக்கு வருகிறது.

இது தொடர்பாக பேசிய இந்தூர் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங், பிச்சை எடுப்பதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்து வருவதாகவும், இம்மாதம் இறுதி வரை இப்பிரச்சாரம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தூர் நகர மக்கள் பிச்சை வழங்குவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

“பிச்சை எடுப்பதை தடை செய்து ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் இது அமலுக்கு வரும். பிச்சை எடுப்பவர்களைச் சுரண்டி சம்பாதிப்பதற்கென்றே திட்டமிட்டு செயல்படக்கூடிய கும்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது பிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் பிச்சைக்காரர்கள் மற்றும் வீதிகளில் அலைந்து திரிபவர்களின் மக்கள்தொகை தோராயமாக 4.13 லட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையானவர்கள் தொழிலாளர் அல்லாதவர்கள் மற்றும் சுமார் 41,400 பேர் விளிம்புநிலை தொழிலாளர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

essential tools for website and social media. Just a moment.... Pontoon boat transport.