நிலவுக்குத் தண்ணீர் சப்ளை செய்யும் பூமி! விண்வெளியில் ஒரு ரகசிய ‘ஹைவே’ – விஞ்ஞானிகள் அதிரடி கண்டுபிடிப்பு!
பூமியின் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன் மற்றும் நீர்த்துளிகள் போன்ற நுண் துகள்கள், பூமியின் காந்தப்புலத்தின் உதவியுடன் பல கோடி ஆண்டுகளாக நிலவுக்குப் பயணம் செய்து வருவதை விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். சூரியக் காற்றினால் தள்ளப்படும் இந்தத் துகள்கள், விண்வெளியில் உருவாகும் ‘காந்த நெடுஞ்சாலை’ (Magnetic Highway) வழியாக நிலவின் மேற்பரப்பை அடைந்து அங்கேயே தங்கிவிடுவதாகப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பூமியில் இருந்து செல்லும் இந்த வளிமண்டலத் துகள்கள் நிலவின் மண்ணில் படிந்துள்ளதால், அவற்றைப் பயன்படுத்தி நிலவிலேயே நீர் மற்றும் ஆக்ஸிஜனை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விஞ்ஞானிகள் தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றனர். நிலவில் மனிதர்கள் குடியேறுவதற்கான அடுத்தகட்ட முயற்சியாகக் கருதப்படும் இக்கண்டுபிடிப்பு, எதிர்கால விண்வெளி வீரர்களுக்குத் தேவையான சுவாசிக்கும் காற்று மற்றும் குடிநீர் தேவைகளை அங்கேயே பூர்த்தி செய்ய வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்வெளியில் பூமியும் நிலவும் எவ்வாறு ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன என்பதை விளக்கும் இந்த ஆய்வு, கோள்களின் வளிமண்டலப் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ளவும் விண்வெளி ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
