பண்டிகை கால நெரிசல்: சென்னைக்குள் வர புதிய சாலை… தயாராகும் புதிய திட்டம்!

Traffic jam 1200

பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களில், சென்னையிலிருந்து செல்லும் பேருந்துகள், போக்குவரத்து நெரிசலால் திண்டிவனத்தை தாண்டுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அதிலும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும், அச்சரப்பாக்கம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளிலும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

அதேபோன்று விடுமுறை முடிந்து சென்னை திரும்பும்போதும் அதிக அளவு வாகனங்கள் படையெடுக்கும் என்பதால், நகருக்குள் வருவதற்கு படாதபாடு பட வேண்டி இருக்கும். சென்னைக்கு வரும் வாகனங்கள் மறைமலை நகர் ஜிஎஸ்டி சாலையிலிருந்து தாம்பரம் கடப்பதற்கு பல மணி நேரங்கள் ஆகிவிடும்.

இதற்கு வெளியூர் செல்லும் பேருந்துகளுடன் புறநகரில் அதிகரித்துள்ள மக்கள் தொகையும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் மக்கள் குடியேறுவது அதிகரித்துள்ளது. இதனால் காலை நேரங்களில் தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதேபோல மாலை நேரங்களில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகிறது.

இவை தவிர, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினமும் பல்லாயிரக் கணக்கானோர் சென்னைக்கு வருகின்றனர். பேருந்துகள், கார்கள், கனரக வாகனங்கள் என லட்சக்கணக்கான வாகனங்கள் புறநகர் பகுதி வழியாக சென்னை நகருக்கு வந்து செல்கின்றன. இதுபோன்ற நெருக்கடிக்கு மத்தியில், பண்டிகை காலங்களும் சேர்ந்துகொண்டால் போக்குவரத்து நெரிசலுக்கு கேட்கவே வேண்டாம்.

32 கி.மீட்டருக்கு புதிய சாலை

இந்த நிலையில், நீண்ட காலமாக நீடித்துக்கொண்டிருக்கும் இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் விதமாக தமிழக அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி சென்னை – தாம்பரம் – திண்டிவனம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கருங்குழி – பூஞ்சேரி சாலை இடையே 32 கி.மீட்டருக்கு புதிய சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன ஆணைய அதிகாரிகள், ” செங்கல்பட்டு – திண்டிவனம் சாலையில் தினசரி 65,000 கார்களும், தாம்பரம் திண்டிவனம் சாலையில் ஒரு லட்சம் கார்களும் கடந்து செல்கின்றன. நாளுக்கு நாள் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், இதற்கு மாற்றாக வேறு சாலையை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, கருங்குழி – பூஞ்சேரி இடையில் உள்ள 32 கிலோ மீட்டருக்கு புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. செங்கல்பட்டுக்கு முன்பாக ஜி.எஸ்.டி சாலையில் மதுராந்தகம் பகுதியில் உள்ள கருங்குழியில் இருந்து ஈசிஆர் – பூஞ்சேரி வழியாக புதிய சாலை அமைக்கப்படுகிறது. தற்போதுள்ள சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்த சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் தொடர்பாக விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்து அளிக்க வேண்டும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு ஆணையத்திடம் கோரிக்கை வைத்து இருந்தது. இந்த கோரிக்கை தொடர்பான விரிவான சாத்தியக் கூறு அறிக்கையை தயார் செய்ய, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.

சுமார் ரூ.80 லட்சம் செலவில் இந்த விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்யப்படவுள்ளது. இந்த புதிய சாலை மூலம் ஈசிஆர் சாலையில் போக்குவரத்து திருப்பி விடபட்டால், மதுராந்தகம் முதல் தாம்பரம் இடையில் போக்குவரத்து நெரிசல் குறையும்” என எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.

திட்டம் விரைந்து செயல்படுத்தப்பட்டால், பயணிகளின் நீண்ட கால சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Earn money recurring online by referring others — completely free and simple to use on websites and social media. Just a moment.... power only wyoming.