புத்தக பிரியர்களின் திருவிழா… தொடங்கியது சென்னை புத்தகக் காட்சி!

Chennai Book fair 1200

லக்கிய ஆர்வலர்களும், புத்தக வாசிப்பாளர்களும் ஆண்டுதோறும் மிக ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை புத்தகக் காட்சி நேற்று தொடங்கியது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை 48 ஆவது சென்னை புத்தகக் காட்சியைத் திறந்து வைத்தார். ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த புத்தகக் காட்சி, விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

மொத்தம் 17 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகக் காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நாவல், சிறுகதைகள் மற்றும் இலக்கியங்கள் என லட்சக்கணக்கான புத்தகங்கள் 10 விழுக்காடு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. புத்தகக் காட்சியின் முதல் நாளிலேயே வாசகர்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

பபாசியில் உறுப்பினரல்லாதவர்கள் விண்ணப்பித்த பெரும்பாலானோருக்கும் அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென இந்த ஆண்டு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஓவியப் போட்டிகள் நடைபெறுகிறது.

தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்திய அகாதமி, டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், நேஷனல் புக் டிரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், மற்றும் தொல்லியல்துறை, ஆகிய நிறுவனங்களும் கலந்துகொள்கிறார்கள். இல்லம் தேடிக் கல்வி இயக்கம் பங்கெடுக்கின்றது. உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களான PENGUIN RANDOM HOUSE INDIA, AMERICAN CONSULATE, BRITISH COUNCIL, HARPERCOLLINS PUBLISHERS INDIA, SIMON மற்றும் SCHUSTER INDIA ஆகிய நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன.

ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைவீச்சுக்கள் நடைபெற உள்ளது.

சென்னை புத்தக காட்சி தொடங்கிவிட்டதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இலக்கிய ஆர்வலர்களும், எழுத்தாளர்களும், புத்தக பிரியர்களும் தலைநகரை நோக்கி வருவதற்கான தங்களது பயண திட்டமிடலைத் தொடங்கிவிட்டனர். வாசகர்களும் தங்களது ஆதர்ச எழுத்தாளர்களை இப்புத்தக காட்சியில் கண்டு உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ஆர்வமுடன் வருவார்கள் என்பதால், இந்த 17 தினங்களும் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திருவிழா கொண்டாட்டமாக தான் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For websites and social media. Just a moment.... power only wyoming.