ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதிக் கேட்டுப் பேரணி… அழைக்கும் பா.ரஞ்சித்!

Armstrong - Pa Ranjith

குஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ஆம் தேதி, பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன் மர்ம கும்பலால் வெட்டிகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட11 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம், கடந்த திங்களன்று என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.

ஆனால், ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக சரணடைந்த குற்றவாளிகள் உண்மையான குற்றவாளிகளா எனப் பல்வேறு தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் சந்தேகம் எழுப்பியதோடு, இது குறித்து முழுமையான விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தனர். திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், “தமிழ்நாட்டில் சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது?” எனக் கேட்டு, அது தொடர்பாக அரசுக்கு 7 கேள்விகளை எழுப்பி இருந்தார்.

நினைவேந்தல் பேரணிக்கு அழைப்பு

இந்த நிலையில், பா.ரஞ்சித் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி நினைவேந்தல் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ” பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

நாட்டையே உலுக்கிய இக்கொடூர நிகழ்வு தனிப்பட்ட முறையில் நம் ஒவ்வொருவருக்கும் பேரிழப்பாகும். தலித்துகள், சமூக அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை அடைய இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதில் அவர்கள் சந்தித்த இழப்புகள் எண்ணிலடங்கா!

இதையெல்லாம் மீறி இயக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் ‘அம்பேத்கரியம்’ என்கிற ஒற்றைப்புள்ளியில் இணைந்த தலைவர்களே நம் பலம். நூறு வருடத்திற்கும் மேலான தலித் அரசியல் வரலாற்றில் ஒரு தலைவரின் இருப்பே கேள்விக்குறியாகியிருப்பது சுலபமாகக் கடந்து போகக்கூடிய நிகழ்வல்ல.

சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் என்கிற ஆளுமையை வீழ்த்திவிட்டால் அவர்தம் நம்பிய அரசியலும் வீழும் என்கிற சிந்தனை உதிப்பதற்கு முன்பே அதைப் பொய்ப்பிக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. பாபாசாகேப் அம்பேத்கரை நெஞ்சிலேந்தி, இவ்விழப்பு ஒரு குடும்பத்திற்கோ, இயக்கத்திற்கோ நேர்ந்ததாகக் கருதாமல் நம் ஒவ்வொருவருக்கும், சமூகத்திற்கும் நேர்ந்த இழப்பு எனப் பறைசாற்றுவோம்.

சாதி, மதம் மற்றும் இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு, தான் நம்பிய தத்துவத்தின்படி வாழ்ந்த சமூக வீரர் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் செயற்பாடுகளை நினைவிலேந்தி வரும் 20 ஆம் தேதி மாலை 3 மணியளவில் சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே கூடி இராஜரத்தினம் அரங்கம் வரை ஊர்வலமாகச் சென்று அங்கு நடைபெறும் நினைவேந்தல் கூட்டத்தில் பெருந்திரளாக அணியமாகி, கட்சிப் பாகுபாடு இல்லாமல் அணிதிரள்வோம்.

வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகளைத் தண்டித்திடவும், தலித் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் குரல் கொடுப்போம். அனைத்து தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்வேறு சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொள்ளும் எழுச்சிமிகு பேரணியில் ஆயிரமாயிரமாய் இணைவோம், வாருங்கள்! ஜெய் பீம்!” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

关于我们. 專業 it方案 ,提供全面的技術解決方案 | tech computer company. Transform your images : unlocking creative photo editing with chatgpt prompts.