தமிழ்நாட்டில் புதிய அம்ரித் பாரத் ரயில் சேவைகள்..!
இந்திய ரயில்வேயின் நீண்ட தூர இணைப்புகளை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, தென்னிந்தியாவையும் கிழக்கு இந்தியாவையும் நேரடியாக இணைக்கும் புதிய ரயில் சேவைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டிலிருந்து மேற்கு வங்க மாநிலத்திற்கு இயக்கப்படவுள்ள மூன்று அம்ரித் பாரத் ரயில்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன. புதிய சேவை திட்டத்தின்படி, தாம்பரத்திலிருந்து மேற்கு வங்க மாநிலத்தின் சந்திரகாச்சி வரை ஒரு அம்ரித் பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது; இது விழுப்புரம், கடலூர், விசாகப்பட்டினம், புவனேஸ்வர் போன்ற முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், திருச்சியில் இருந்து நியூ ஜல்பைகுரி வரை இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயில் ஈரோடு, சேலம், விஜயவாடா, விசாகப்பட்டினம், கட்டக் மற்றும் பாட்னா உள்ளிட்ட பிரதான நிலையங்களில் இடைநிறுத்தம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாகர்கோவிலில் இருந்து நியூ ஜல்பைகுரி வரை இயக்கப்படும் மூன்றாவது ரயில் மதுரை, திருச்சி, நெல்லூர், விசாகப்பட்டினம், புவனேஸ்வர் மற்றும் ஹவுரா போன்ற முக்கிய ரயில் சந்திப்புகளைக் கடந்து செல்லும் வகையில் அமைக்கப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வரும் ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இந்த புதிய ரயில் சேவைகளைத் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், இந்தியாவில் முதன்முறையாகத் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவையும் தொடங்கப்படுகிறது; இது அசாம் மாநிலம் காமாக்யாவிலிருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுரா வரை இயக்கப்படும். முழுமையாக ஏசி வசதி கொண்ட 16 பெட்டிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய ரயில்களில் பயணிகளின் வசதியை மையமாகக் கொண்டு நவீன உள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு இருக்கைக்கும் தனிப்பட்ட விளக்கு, மொபைல் மற்றும் லேப்டாப் சார்ஜிங் வசதி, கூடுதல் சேமிப்பு இடங்கள் போன்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து கிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் செய்யும் பயணிகளிடையே இந்த புதிய சேவைகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
