“ஒரு கப் காபி ரூ.700க்கு விற்றால்… தியேட்டர்கள் காலியாகும்!” – உச்ச நீதிமன்றம் அதிருப்தி
சினிமா தியேட்டர்களில் டிக்கெட் விலையை விட ஸ்நாக்ஸ் விலை அதிகமாக இருப்பது குறித்து பொதுமக்கள் பல ஆண்டுகளாக புலம்பி வருகிறார்கள். இதே குற்றச்சாட்டை இப்போது உச்ச நீதிமன்றமே கடுமையாக எடுத்துக்கொண்டுள்ளது.
கர்நாடகாவில் தியேட்டர்களுக்கு அதிகபட்சமாக ரூ.200 மட்டும் டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கும் அரசின் உத்தரவுக்கு எதிராக தியேட்டர் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்தபோது, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.நீதிபதி விக்ரம் நாத், “தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.100, காபிக்கு ரூ.700 வசூலிக்கிறீர்கள். இவ்வளவு அநியாய விலைக்கு விற்றால் தியேட்டர்கள் காலியாகிவிடும். மக்கள் வரமாட்டார்கள்” என்று எச்சரித்தார்.
மாநில அரசின் நோக்கம் நுகர்வோரை பாதுகாப்பதே எனவும், தியேட்டர்களில் விலைக்கட்டுப்பாடு அவசியம் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.இதற்கு எதிராக, இந்திய மல்டிபிளக்ஸ் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “தாஜ் ஹோட்டலில் காபிக்கு ரூ.1,000 வசூலிக்கிறார்கள்; அதை நீங்கள் கட்டுப்படுத்த முடியுமா? இது விருப்பம் சார்ந்தது” என்று வாதிட்டார்.
ஆனால் இதை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. தற்போது சாதாரண தியேட்டர்கள் குறைந்து வருவதாகவும், நியாயமான கட்டணங்கள் இல்லையெனில் திரையரங்குகள் மேலும் வெறிச்சோடிவிடும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.மேலும், டிக்கெட் வாங்குபவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்ற கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவது சிரமம் என ரோஹத்கி வாதிட்டார்.
இதற்கு கர்நாடக அரசு,“நுகர்வோர் பாதுகாப்பிற்காகவே அடையாள ஆவணங்களை கேட்கிறோம். அரசு வென்றால், இன்று ரூ.1,000க்கு வாங்கும் டிக்கெட்டுக்கு ரூ.800 திருப்பிக் கிடைக்கும்” என விளக்கியது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கண்டனம், தியேட்டர் ஸ்நாக்ஸ் விலை மீதான நாட்டுப்பரப்பு விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
