ஒரு கோடி வீடுகளுக்கு அதிவேக இணையதள வசதி… அடுத்த மாதம் அமல்!

மத்திய அரசு, ‘பாரத் நெட்’ திட்டத்தின் கீழ் அனைத்து கிராமப்புறங்களுக்கும் அதிவேக இணையதள சேவை வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கியது.
தமிழ்நாட்டில் இந்த திட்டம் கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளில் ‘ஆப்டிகல் பைபர் கேபிள்கள் மூலம் அதிவேக இணைய தள சேவை வழங்க திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கி, தற்போது அது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.11 ஆயிரத்து 800 கிராமங்களில் பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டன.
இந்த திட்டத்திற்காக தமிழகத்தில் சுமார் 55,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேபிள் பதிக்கப்பட்டு உள்ளன. மேலும் 11,800 கிராமங்களில் பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டன. வனப்பகுதிகள் உள்ளிட்ட சில இடங்களில் அனுமதி பெற்று கேபிள் பதிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதால் அங்கு மட்டும் பணிகள் முழுமை பெறவில்லை. இருப்பினும் அடுத்த மாதத்திற்குள் அந்த பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதுவரை சுமார் 4 ஆயிரம் கிராமங்களில், இணையதள சேவை வழங்குவதற்கான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்புகள் https://tanfinet. tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் மேலும் 4 ஆயிரம் கிராமங்களுக்கு வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
தற்போதைய நிலையில், ஏஜென்சிகள் நியமனம் முடிந்து விட்டால், அரசின் அனுமதி பெற்று உடனடியாக பொதுமக்களுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு விடும்.

இந்த ஆண்டுக்குள் மட்டும் ஒரு கோடி வீடுகளுக்கு அதிவேகத்தில் இணையதள சேவை கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீடுகளுக்கு குறைந்தபட்சமாக ரூ.199 கட்டணத்தில், 20 எம்.பி.பி.எஸ் (Mpbs) வேகத்தில் அளவில்லா இணையதள சேவை வழங்கப்படுகிறது.
மேலும், ரூ.399 மற்றும் ரூ.499 திட்டமும் வழங்கப்பட உள்ளது. வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு ரூ.899 மற்றும் ரூ.1,199 என்ற இரு திட்டங்கள் செயல்பட உள்ளன. அடுத்த மாதத்தில் இணைப்புகள் வழங்கும் பணி தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.