IPL 2025: நூர்-ரச்சின் மாயாஜாலம்… CSK வெற்றியும் மும்பை அணியின் நீங்காத சாபமும்!

IPL 2025

ஞாயிறன்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனின் மூன்றாவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து, தனது பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியது.

இந்த “எல் கிளாசிகோ” போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸின் புதிய நட்சத்திரங்களான நூர் அகமது மற்றும் ரச்சின் ரவீந்திராவின் மாயாஜால ஆட்டம், மும்பையை மண்டியிட வைத்ததோடு, அவர்களின் 13 ஆண்டு தொடக்க ஆட்ட தோல்வி சாபத்தை மேலும் நீட்டிக்க வைத்தது.

நூர் அகமதுவின் சுழல் மாயம்

20 வயதே ஆன ஆப்கானிஸ்தான் இடது கை சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது, தனது முதல் ஐபிஎல் போட்டியிலேயே 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்து, மும்பையின் பேட்டிங் வரிசையை சிதறடித்தார். ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட நூர், தனது மதிப்பை முதல் போட்டியிலேயே நிரூபித்தார். சுழள் பந்து வீச்சுக்கு ஏற்ற சேப்பாக்க மைதானத்தில், அவரது “ரிஸ்ட் ஸ்பின்” மந்திரம் மும்பை அணி வீரர்களை திணற வைத்தது. சூர்யகுமார் யாதவ் (29) மற்றும் திலக் வர்மா (31) ஆகியோர் 51 ரன்கள் சேர்த்து தங்களது அணியை சரிவிலிருந்து மீட்க முயன்றபோது, நூர் தனது மாயவலையை வீசினார்.

முதலில், சூர்யகுமாரை ஒரு “ராங்-அன்” பந்தால் ஏமாற்றி, அவரை கிரீஸை விட்டு வெளியேற்றினார். பின்னால் நின்ற எம்.எஸ். தோனி, 43 வயதிலும் 0.12 வினாடிகளில் ஸ்டம்பிங் செய்து, நூருக்கு மிகப்பெரிய ஆதரவை அளித்தார். பின்னர், திலக் வர்மாவை, வேகமாக சறுக்கிய ஒரு பந்தால் எல்பிடபிள்யூ ஆக்கி, மும்பை அணியின் நம்பிக்கையை உடைத்தார்.

நூர் அகமது

ராபின் மின்ஸ் மற்றும் நமன் திர் ஆகியோரையும் விரைவாக வீழ்த்தி, மும்பையை 96/6 என்ற நிலைக்குத் தள்ளினார். நூரின் ஒவ்வொரு பந்தும், பேட்ஸ்மென்களை யூகிக்க வைத்து, சேப்பாக்கத்தில் சுழல் பந்து வீச்சின் வலிமையை நிரூபித்தது. அவர் எடுத்த 4 விக்கெட்டுகள், மும்பையை 155/9 என்ற மிதமான ஸ்கோருக்கு மட்டுப்படுத்தியது.

ரச்சின் ரவீந்திராவின் பேட்டிங் மந்திரம்

156 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய CSK, ஆட்டமிழக்காமல் ரச்சின் ரவீந்திரா எடுத்த 65 ரன்களால் (45 பந்துகள்) வெற்றியை எளிதாக்கியது. நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ரச்சின், தனது நிதானமான பேட்டிங்கால், சென்னை அண்கியை இலக்கை நோக்கி படிப்படியாக அழைத்துச் சென்றார். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 53 (26 பந்துகள்) அதிரடியாக ஆடி அடித்தளம் அமைத்தாலும், அவரது வெளியேற்றத்திற்குப் பின், ரச்சின் தனது பொறுப்பை உணர்ந்து ஆட்டத்தை கட்டுக்குள் வைத்தார்.

ரச்சின் ரவீந்திரா

அதே சமயம் மும்பை அணணியின் புதுமுக சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் (3/32) ருதுராஜ், சிவம் துபே, தீபக் ஹூடா ஆகியோரை வீழ்த்தி, CSK-ஐ சற்று தடுமாற வைத்தார். ஆனால், ரச்சின் அவரை எதிர்கொண்டு மூன்று சிக்ஸர்களை விளாசி, அழுத்தத்தை தணித்தார். 42 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், இறுதியில் மிட்செல் சாண்ட்னரை சிக்ஸருக்கு அடித்து, தோனியுடன் சேர்ந்து வெற்றியை உறுதி செய்தார். ரச்சினின் ஆட்டம், அதிரடி மற்றும் நிதானத்தின் சரியான கலவையாக அமைந்து, CSK-க்கு தொடக்க வெற்றியை பரிசளித்தது.

மும்பை அணியின் நீங்காத சாபம்

மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, 2012-ஆம் ஆண்டு முதல் தனது ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற முடியாமல் போகும் சாபம், தொடர்ந்து 13 ஆண்டுகளாக இந்த ஆட்டத்திலும், தொடர்ந்தது. ரோகித் சர்மா டக்-அவுட் ஆனது, சூர்யகுமார் மற்றும் திலக் ஆகியோரால் மட்டுமே சிறிது எதிர்ப்பு காட்ட முடிந்தது. தீபக் சாஹரின் 28 ரன்கள் (15 பந்துகள்) மட்டுமே மும்பையை 150-ஐ தாண்ட வைத்தது. ஆனால், நூரின் சுழலும், ரச்சினின் பேட்டிங்கும் அவர்களை மீட்க முடியவில்லை.

சேப்பாக்கத்தின் மந்திரம்

சுழல்பந்து வீச்சுக்கு ஏற்ற சேப்பாக்க மைதானத்தில், நூர், அஸ்வின் (1 விக்கெட்), ஜடேஜா (0/21) ஆகியோர் மும்பை அணியை கட்டுப்படுத்தினர். ரச்சினின் பேட்டிங், CSK-யின் புதிய சீசனுக்கு வலுவான தொடக்கத்தை அளித்தது. இந்த மாயாஜால ஆட்டம், சென்னையை வெற்றி பாதையில் தொடர வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

茶叶. International social service hong kong branch. The future is now : top 10 technologies shaping 2025 » tech news today.