செங்கல்பட்டில் தொடங்கப்பட்ட கோத்ரேஜ் ஆலை… 1000 பேருக்கு வேலைவாய்ப்பு!

Godrej

கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் 33 இடங்களில் தனது உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, இந்நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில், 515 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சோப்புகள், முகஅழகு க்ரீம்கள், தலைமுடி பராமரிப்பு சாதனங்கள் மற்றும் கொசு ஒழிப்பான் போன்றவற்றிற்கு ஒரு உற்பத்தி மையத்தை நிறுவி உள்ளது.

இந்த திட்டத்தில், 50 சதவிகிதம் அளவிற்கு பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தை நிறுவுவதற்கு, தமிழ்நாடு அரசிற்கும் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தானது.

இந்த நிலையில், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனத்தின் உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார்.

1,010 நபர்களுக்கு வேலைவாய்ப்பு

அப்போது பேசிய அவர், ” 515 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனம், 1,010 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறீர்கள். ஆயிரம் குடும்பங்களை வாழ்விக்க இருக்கிறீர்கள் என்று நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்! இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு, பெருமையும் அடைகிறேன்!

கோத்ரெஜ் நிறுவனத்துடன் 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) போட்டோம். அடுத்த ஐந்தே மாதத்தில் அதாவது, 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது அடிக்கல் நாட்டப்பட்டது. இப்போது, அடிக்கல் நாட்டிய ஒரே ஆண்டில் துவக்கி வைக்கக்கூடிய நிகழ்ச்சியை பார்க்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது. புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, ஒரு திட்டம் செயலாக்கம் பெறுவது வரைக்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு, எப்படி கவனமாகவும், பொறுப்போடும் செயல்படுகிறது என்பதற்கு இந்த நிறுவனம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது!

தமிழ்நாட்டில் நுகர்வோர் பொருட்களின் சந்தை, மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை கொண்டிருக்கிறது. இந்தத் துறை மிகவும் ஆற்றல் மிக்கது, போட்டித்தன்மை கொண்டது. இனி வருங்காலங்களில், மேலும் இந்த நிலை அதிகரிக்கும். மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில், தமிழ்நாடும் ஒன்று என்பதால், தமிழ்நாடு பெரும்பாலான நிறுவனங்களுக்கு முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் வாய்ப்புகள் ஏராளம்

பிரிட்டானியா, டாபர், ITC நிறுவனங்கள் மற்றும் உங்களின் நிறுவனமும் சேர்த்து, பல FMCG நிறுவனங்களின் உற்பத்தித் திட்டங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் துறை மேலும் வளர்ச்சி பெற தமிழ்நாட்டில் வாய்ப்புகள் ஏராளமாக இருக்கிறது.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. 2030-ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற எங்களின் இலட்சிய இலக்கை அடைவதற்கு, அனைத்து முன்முயற்சிகளையும் நம்முடைய திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது.

முதலீட்டாளர்களுக்குத் தேவையான, அனைத்து ஆதரவுச் சேவைகளையும் நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கிறது. அதனால்தான், ஆட்சி பொறுப்பேற்ற இந்த நான்காண்டுகளில், பல்வேறு துறைகளில் பெரும் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது, பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய, சமூகநீதியை உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தனித்தன்மை வாய்ந்தது.பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமத்துவம் போன்ற கொள்கைகளை அடித்தளமாக கொண்ட ஒட்டுமொத்த வளர்ச்சி என்பதால், தமிழ்நாடு மற்ற மாநிலங்களிலிருந்து தனித்து தெரிகிறது என்று உலகத்திற்கே தெரியும். அதனால்தான் தமிழ்நாட்டில் முதலீடுகள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

黑茶. 專業 it方案 ,提供全面的技術解決方案 | tech computer company. The future is now : top 10 technologies shaping 2025 » tech news today.