1,000 டீசல் பேருந்துகள் காஸ் பேருந்துகளாக மாறுகிறது… அரசுப் போக்குவரத்துக் கழகம் முடிவு!

SETC 1200

மிழக போக்குவரத்து துறையில் சென்னை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை உள்ளிட்ட 8 போக்குவரத்து கழகங்களில் 26 மண்டலங்கள் மூலம் 317 பணிமனைகளில் இருந்து 10,129 வழித் தடங்களில் 20,232 பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது.

இதில், 3.5 லட்சம் பேர் சென்னையில் மட்டும் மாநகர பஸ்களில் பயணம் செய்கின்றனர். தமிழகம் முழுவதும் தினமும் 1.32 கோடி பேர் பயணம் செய்கின்றனர். லாப நோக்கம் இல்லாமல், கிராமங்களில் மக்கள் சேவைக்காக மட்டுமே இந்த பஸ்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த பேருந்துகளுக்கான டீசல் செலவினம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், காற்று மாசு ஏற்படவும் காரணமாக அமைந்துள்ளன. ஏற்கனவே, டீசல் பயன்பாட்டிற்கு பதிலாக அரசு பேருந்துகளை மின்சார பேருந்துகளாகவோ அல்லது இயற்கை எரிவாயு பயன்படுத்தி இயக்கும் பேருந்துகளாகவோ மாற்ற போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டு அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வந்தன.

குறிப்பாக, டீசலுக்கு பதிலாக சிஎன்ஜி (காஸ்) பயன்படுத்தி இயக்கினால் மைலேஜ் கூடுதலாக கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக நடத்தப்பட்ட ஆய்வின் படி வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை இயற்கை எரிவாயுவிற்கு மாற்ற போக்குவரத்து கழகங்கள் மூலம் முடிவு செய்யப்பட்டன. அந்தவகையில் முதற்கட்டமாக 1000 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்து முறைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சிஎன்ஜி (காஸ்) மாற்றப்பட உள்ள பேருந்துகள் அதிகபட்சமாக 8 லட்சம் கிலோ மீட்டருக்கும் குறைவாக இயக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், ஆறு முதல் ஏழு ஆண்டுகளுக்குள் வாங்கப்பட்ட பேருந்துகளாக இருக்க வேண்டும் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.70 கோடி நிதி ஒதுக்கி அனுமதியை வழங்கி உள்ளது.

இது குறித்து பேசும் போக்குவரத்து துறை அதிகாரிகள், “தமிழகத்தில் டீசலுக்கு மாற்றாக அரசு பேருந்துகளை இயக்க பல்வேறு ஆலோசனைகளை செய்துவந்தோம். அதன்படி, மைலேஜ் அதிகரிக்கவும், காற்று மாசடைவதை தடுக்கவும் இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகளை இயக்க திட்டங்களை வகுத்திருந்தோம்.

அந்தவகையில், சிஎன்ஜி என்ற இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படுவதால் இந்த பேருந்துகள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தாது. மேலும் டீசல் பேருந்துகளை ஒப்பிடும்போது சிஎன்ஜி பேருந்துகள் இயக்கத்தின் மூலம் செலவு குறைந்து வருவாய் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. தற்போது முதற்கட்டமாக டீசலில் இருந்து சி.என்.ஜி (காஸ்) மாற்றப்பட உள்ள 1000 பேருந்துகளைக் கண்டறியும் பணிகள் மேற்கொண்டு வருகிறோம். காஸ் பேருந்துகளை இயக்குவதன் மூலம் மாசு குறையும்” என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

→ grow your audience effortlessly. Just a moment.... Hawaii car transport.