‘சென்னை சங்கமம்’… எந்தெந்த இடங்களில் என்னென்ன கலை நிகழ்ச்சிகள்?

chennai sangamam 1200

மிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளை வெளிப்படுத்தும் விதத்தில் ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ என்ற பிரம்மாண்ட கலைவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, பாரம்பரிய தமிழ் கலையை மக்களிடையே ஊக்குவிக்கும் விதமாக, 2007 முதல் பொங்கல் திருநாளை சிறப்பிக்கும் வகையில், அரசு சார்பில் ‘சென்னை சங்கமம்’ என்ற பெயரில் கலை பண்பாட்டு திருவிழாவைச் சென்னையில் ஒருங்கிணைத்து நடத்தி வந்தார். அதற்கு சென்னை மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வந்த அவ்விழா, 2011 ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நடத்தப்படவில்லை. 2021 ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், இந்த விழா மீண்டும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டின் ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகளை சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.1.2025 அன்று கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத் திடலில் தொடங்கி வைக்கிறார். கலை நிகழ்ச்சிகள் 17.1.2025 வரை தொடர்ந்து 4 நாட்கள் சென்னை மாநகரின் முக்கியமான 18 இடங்களில் நடைபெறுகின்றன.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் முன்னணி கலைஞர்களுடன் 200 கிராமிய கலைஞர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் வெகுசிறப்பாக நடைபெறும்.

சென்னையில் எந்தெந்த இடங்கள்?

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சென்னை இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா வளாகம், சைதாப்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் விளையாட்டு மைதானம், எழும்பூர் அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுர பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூர் மாநகராட்சித் திடல், அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டுத் திடல் ஆகிய 18 இடங்களில் ‘சென்னை சங்கமம்’ கலை விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அனுமதி இலவசம்.

1500 கலைஞர்கள் பங்கேற்பு

சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1500 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் சென்னையின் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசை கலைஞர்கள் ஆகியோரும் கலை நிகழ்ச்சி வழங்க உள்ளார்கள்.

இவற்றுடன் மகாராஷ்டிராவின் லாவணி, ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் துர்சி நிருத்தியா, கோவாவின் விளக்கு நடனம், மிசோராம் மூங்கில் நடனம் ஆகியவைகளும் நடைபெற உள்ளன.

உணவுத் திருவிழாவும் உண்டு

‘சென்னை சங்கமம்’ கலை விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகள் இடம்பெறும் வகையில் உணவுத் திருவிழாவும் நடைபெறும். இதனால், பார்வையாளர்கள் கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பதுடன் தங்களுக்கு விருப்பமான உணவுகளையும் உண்டு மகிழலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ai blog : create content automatically and earn. Just a moment.... heavy equipment transport hampden ma.