சென்னைக்கு மீண்டும் வெள்ள ஆபத்தா?
சென்னையில் உள்ள முக்கிய குடிநீர் ஏரிகளில் அளவுக்கு அதிகமான நீர் சேமிக்கப்பட்டிருப்பது, 2015ம் ஆண்டு போல் மீண்டும் வெள்ள ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகளில் மொத்த கொள்ளளவு 11.75 டி.எம்.சி. உள்ள நிலையில், தற்போது 9.27 டி.எம்.சி. நீர் இருப்பதாக தகவல். இதில் செம்பரம்பாக்கம் ஏரியில் 2.94 டி.எம்.சி., புழல் ஏரியில் 2.76 டி.எம்.சி., பூண்டியில் 2.38 டி.எம்.சி. அளவிலான நீர் சேமிக்கப்பட்டுள்ளது.
மத்திய நீர்வள ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வடகிழக்கு பருவமழை காலத்தில், முக்கிய ஏரிகளில் குறைந்தது 1 டி.எம்.சி. அளவிற்கு நீரை காலியாக வைத்திருக்க வேண்டும். இது அதிக மழைபொழிவின் போது ஏரியின் பாதுகாப்பை உறுதி செய்யும். ஆனால், தற்போது அந்த விதிகள் பின்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இடையே ஏற்பட்ட மோதலே இந்த நிலைக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ஓட்டேரி, அரும்பாக்கம்-விருகம்பாக்கம் கால்வாய்களில் நடைபெறும் பணிகளில் இருந்து நீர்வளத்துறைக்கு கிடைக்க வேண்டிய வருவாய் குறைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் எதிரொலியாக, நீர்வளத்துறை அதிகாரிகள் அதிக நீரை ஏரிகளில் சேமித்து, மாநகராட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக பேரிடர் மேலாண்மை துறை வட்டாரங்கள் கூறுகின்றன. கனமழை பெய்தால், இந்த நீர் ஒரே நேரத்தில் வெளியேற்றப்படுவதால், சென்னையில் மீண்டும் பெருவெள்ள அபாயம் உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
