அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்காக 7,030 புதிய பேருந்துகள்… ஓரம் கட்டப்படும் பழைய பேருந்துகள்!

மிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த 20,260 பேருந்துகள், 10,125 வழித்தடங்களில் இயங்கி வருகின்றன. தினசரி 18 ,728 பேருந்துகளும், வார இறுதி நாட்களில் பொதுமக்கள் தேவையின் அடிப்படையில் அதிகப்படியான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு, நாளொன்றுக்கு சுமார் 1.76 கோடி பயணிகள் பயன்பெறுகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டின் சில இடங்களில் அரசு பேருந்துகள் பழுதடைந்தது தொடர்பான சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகின. கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று, ராஜபாளையத்தில் கட்டணமின்றி மகளிர் பயணம் செய்யும் அரசுப் பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்புற படிக்கட்டு உடைந்து சாலையோரம் விழுந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

ராஜபாளையத்தில் படிக்கட்டு உடைந்த பேருந்து

இதனால், பேருந்துகள் பராமரிப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், ஓடத்தகுதி இல்லாத பேருந்துகளை இயக்கக்கூடாது என்றும், புதிய பேருந்துகள் வாங்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.

இந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் விதமாக, வரும் நாட்களில் 7,682 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழுதும் பராமரிப்பும்

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் தடத்தில் பழுதடையும் எண்ணிக்கை, கடந்த காலங்களில் அதிகபட்சமாக 10,000 கிலோ மீட்டருக்கு 0.10 என்ற அளவில் இருந்தது, கடந்த மூன்று ஆண்டுகளில் பேருந்துகளின் பராமரிப்பில் தனிக் கவனம் செலுத்துவதன் காரணமாக 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் முறையே 0.002 மற்றும் 0.001 ஆக குறைந்துள்ளது.

ஊடகங்கள் மூலம் அரசின் கவனத்திற்கு வரும் பழுதுகள் உட்பட, அனைத்து பழுதுகளும் முழுமையாக களையப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாடு அரசு 48 மணி நேரத்திற்குள் அனைத்து பேருந்துகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி சரிசெய்ய வேண்டும் என ஏப்ரல் 26 அன்று உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தற்போது அனைத்து பேருந்துகளும் ஆய்வு செய்யப்பட்டு போர்க்கால அடிப்படையில் பழுதுகள் சரி செய்யப்பட்டு வருகின்றன.

வயது முதிர்ந்த பேருந்துகள்

கொரோனா தொற்றுக் காலமான 2020-21 மற்றும் 2021-22 ஆகிய காலக் கட்டங்களில், போக்குவரத்துக் கழகங்களில் எந்த வருமானமும் இல்லாமல், அதிக நிதி நெருக்கடியில் இருந்த காரணத்தால், புதிய பேருந்துகள் எதுவும் வாங்க இயலாத சூழல் இருந்தது. இதன் காரணமாக பல ஆண்டுகளாக பயன்பாட்டிலுள்ள பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமாகி, 31.12.2023-இன் படி, பேருந்துகள் சராசரி வயது 9.13 வருடமாகவும், வயது முதிர்ந்த பேருந்துகளின் எண்ணிக்கை 10, 582 ஆகவும் (52.73 சதவிகிதம்) இருந்தது.

புதிதாக 7,682 பேருந்துகள்

இந்நிலையில், அரசு கடும் நிதி நெருக்கடிக்கு இடையிலும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு 2022-23-இல் 1,000 புதிய பேருந்துகள், 2023-24-இல் 1,000 புதிய பேருந்துகள், 2024-25-இல் 3,000 பேருந்துகளும், எஸ்.ஏ.டி.பி. திட்டத்தின் கீழ் 16 பேருந்துகளும் மற்றும் ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் 2,666 புதிய பேருந்துகளும் என மொத்தம் 7,682 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரையில் 652 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு, அதே எண்ணிக்கையிலான வயது முதிர்ந்த பேருந்துகள் அகற்றப் பட்டுள்ளன. மீதமுள்ள 7,030 பேருந்துகளும் இந்த நிதி ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கு வரு வதன் மூலம் அதே எண்ணிக்கையில் உள்ள வயது முதிர்ந்த பேருந்துகள் அகற்றப்பட உள்ளன.

மின்சார பேருந்துகள்

மேலும், மொத்த செலவு ஒப்பந்த அடிப்படையில் சென்னையில் 1,000 மின்சார பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள பேருந்துகளின் கூண்டினை புதுப்பிக்க 2022-23இல் 1,000 பேருந்துகளும், 2023-24 இல் 500 பேருந்துகளும் என நடவடிக்கை எடுக்கப் பட்டு, இதுவரையில் 839 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு தடத்தில் இயக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பேருந்துகளும், இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்டு தடத்தில் இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2020 leroy agency press + direct news today + 1 news today broadcasting + erika leroy de saxe. Un реасеkеереrѕ іn lebanon ѕау iѕrаеl hаѕ fіrеd on thеіr bаѕеѕ deliberately. Hest blå tunge.