Amazing Tamilnadu – Tamil News Updates

UPI பணப் பரிவர்த்தனை… அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்… முழு விவரம்!

யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு ( Unified Payments Interface -UPI), இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய விதிமுறைகள் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், புதிய விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் குறித்த முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்…

யுபிஐ என்பது பல வங்கிக் கணக்குகளை ஒரே மொபைல் பயன்பாட்டில் இணைக்கும் அமைப்பாகும். ஒவ்வொரு வங்கியும் ஆண்ட்ராய்டு, விண்டோஸ் மற்றும் iOS மொபைல் பிளாட்ஃபார்ம்களுக்கு, அதன் சொந்த யுபிஐ பயன்பாட்டை வழங்குகிறது.

அந்த வகையில், ஸ்மார்ட்போன் மூலம் உடனடிபணப் பரிமாற்றத்தை மேற்கொள்வதில் யுபிஐ மிகப்பெரிய பங்காற்றுகிறது. இதனால், நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி கொண்டதாக யுபிஐ திகழ்கிறது. இது, இந்தியாவில் டிஜிட்டல் பணம் செலுத்துவதில் மிகவும் திறமையான மற்றும் நம்பகமான முறையாக உள்ளதால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 10 பில்லியன் பரிவர்த்தனைகளைக் கடந்துள்ளது.

அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்…

இந்த நிலையில், அதிகரித்து வரும் ஆன்லைன் பேமன்ட் மோசடி சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, யுபிஐ பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்துவதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு, புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. அந்த விதிமுறைகள், இந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி Google Pay, Paytm மற்றும் PhonePe போன்ற பேமன்ட் செயலிகள் மற்றும் வங்கிகள், ஒரு வருடத்துக்கும் மேலாக செயல்படுத்தப்படாமல் இருக்கும் யுபிஐ ஐடி-களை செயலிழக்க செய்யுமாறு இந்திய தேசிய பரிவர்த்தனைக் கழகம் (National Payments Corporation of India – NPCI ) கேட்டுக் கொண்டுள்ளது.

ரூ.2000-க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு…

மேலும், ப்ரீபெய்டு பேமன்ட் கருவி மூலம் ரூ.2000 -க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்ற கட்டணம் வசூலிக்கப்படும். அத்துடன் மோசடிகைளை தடுக்க ரூ.2000-க்கு மேல் செய்யப்படும் முதல் பரிவர்த்தனைக்கு 4 மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. யுபிஐ பரிவர்த்தனையில் டேப் அண்ட் பே வசதியும் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதுதவிர, ரிசர்வ் வங்கியானது ஜப்பானின் ஹிட்டாச்சியுடன் இணைந்து நாடு முழுவதும் யுபிஐ ஏடிஎம்களை திறக்க உள்ளது. அதில், வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கிலிருந்து கியூஆர் குறியீடை ஸ்கேன் செய்வதன் மூலம் பணத்தை எடுக்கலாம்.

மேலும், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான தினசரி கட்டண வரம்பு ஒரு லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதில், விதிவிலக்குகளும் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பரில், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு UPI செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்பை ரிசர்வ் வங்கி ரூ. 5 லட்சமாக உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version