Amazing Tamilnadu – Tamil News Updates

தூத்துக்குடி துறைமுகப் பணியில் தமிழர்கள் புறக்கணிப்பா?

தூத்துக்குடி துறைமுக ஆணையத்தில் பல்வேறு பதவிகளுக்கான பணி நியமனங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், தமிழர்கள் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது தமிழர்களை புறக்கணிக்கும் முயற்சி எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூத்துக்குடி துறைமுக ஆணையத்தில் சட்ட அலுவலர் தகுதி 1, உதவி செயல் பொறியாளர்கள் மெக்கானிக்கல், சிவில் ஆகிய பதவிகளுக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட நியமனத் தேர்வுகளில் எழுத்து தேர்வு, நேர்காணல்கள் முடிந்த பின்னர் – ஒருவர் கூட தேர்வு பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அறிவிப்பு ஆச்சரியம் அளிப்பதுடன் தேர்வு முறைமை குறித்த கேள்விகளையும் எழுப்பி உள்ளதாக கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன், இது தமிழர்களை புறக்கணித்துவிட்டு வடமாநிலத்தவரை தூத்துக்குடி துறைமுகத்தில் நியமிக்கும் முயற்சி எனக் குற்றம் சாட்டி உள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடி துறைமுக ஆணையம் நடத்திய தேர்வில் 17 பேர் பங்கேற்ற நிலையில், ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லையா என அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.

“சட்ட அலுவலர் தகுதி 1, உதவி செயல் பொறியாளர்கள் மெக்கானிக்கல், சிவில் ஆகிய பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் அவை. இத்தகைய அறிவிப்பு ஆச்சரியம் அளிப்பதுடன் தேர்வு முறைமை குறித்த கேள்விகளையும் எழுப்பி உள்ளன.

இதுகுறித்து துறைமுக இணை அமைச்சர் சாந்தனு தாகூர் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளேன். இதுகுறித்து மேல்மட்ட ஆய்வு நடத்தி அதன் விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டு தேர்வின் நம்பகத்தன்மையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ” மற்ற பதவிகளுக்கெல்லாம் தகுதியான ஆட்கள் இல்லை என அறிவித்துவிட்டு இந்தி அதிகாரி பதவிக்கு மட்டும் ஆட்களை தேர்வு செய்திருக்கிறது.
தீ அணைப்பு அதிகாரிக்கு கூட ஆள் இல்லையாம். ஆனால் இந்திக்கு ஆள் இருக்கிறதாம்.தீ அணைப்பை விட முக்கியம் இந்தி திணிப்பு” என்றும் அவர் சாடி உள்ளார்.

Exit mobile version